"தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு"... எழுத்தாளர் பூமணி மறைவுக்கு மாரி செல்வராஜ் இரங்கல்
சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பூமணி காலமானார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் அவர் காலமானார். அவருக்கு வயது 79.
அவரது இறுதிச் சடங்குகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடக்கின்றன. கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் இன்று மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் மாரி செல்வராஜ் எழுத்தாளர் பூமணி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்சமூகத்தின் மூத்த படைப்பாளி பெரும் மரியாதைக்குரிய ஐயா.பூமணி அவர்களின் மரண செய்தி மீளா துயரத்தையும் வேதனையையும் தருகிறது. தன் வாழ்நாள் முழுவதும் இத்தமிழ்சமூகத்தின் அதிலும் குறிப்பாக தெக்கத்தி மக்களின் துல்லியமான வாழ்வியலையும் அறத்தையும் பெரும் படைப்புகளாக்கி சாகித்திய அகாடமி விருதையும் பெற்ற ஐயாவை போற்றும் விதமாக ஐயாவின் நல்லடக்கத்திற்கு அரசு மரியாதை வழங்கிய தமிழக அரசுக்கு என் நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துகொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.