சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நீக்கம்.. 17 ஆண்டு உறவு முறிந்தது.. பின்னணி என்ன?
சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நீக்கம்.. 17 ஆண்டு உறவு முறிந்தது.. பின்னணி என்ன?
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணியுடன் கடந்த 17 ஆண்டுகளாக நீடித்து வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீபன் பிளெமிங், கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சிஎஸ்கே அணியின் வீரராக இணைந்தார். பின்னர் 2009ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். 17 ஆண்டுகால அவரது பயிற்சியின் கீழ் சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தது.
மேலும் சிஎஸ்கே அணி 12 முறை பிளே-ஆஃப் சுற்றுகளுக்கும், 10 முறை இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்தார் பிளெமிங். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. மேலும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பெரும் சரிவை சந்தித்தது. இதை அடுத்து பிளெமிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிளெமிங்கின் நீக்கம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் கூறுகையில், "எங்கள் அணியின் அடையாளத்தையும் இலக்குகளையும் வடிவமைப்பதில் பிளெமிங் முக்கிய பங்கு வகித்தார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் தலைமைப் பண்பிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார். சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் வெளியிட்டுள்ள குறிப்பில், "அணியை எப்போதும் முன்னிலைப்படுத்தும் கலாச்சாரத்தை பிளெமிங் உருவாக்கினார். அவரது தாக்கம் மைதானத்தைத் தாண்டியும் நீடிக்கும்" என்று புகழ்ந்து இருந்தார்.
சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுவது குறித்துப் பேசிய ஸ்டீபன் பிளெமிங், "சிஎஸ்கே அணியுடன் பயணித்த இந்த 18 ஆண்டுகள் எனது பயிற்சியாளர் வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த கௌரவமாகும். கடினமான காலங்களைக் கடந்து மறக்க முடியாத வெற்றிகளைக் கொண்டாடியுள்ளோம். சிஎஸ்கே அணி எப்போதும் எனது இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.