"வைபவ் சூர்யவன்ஷி பேன்ட்டை உருவி இருப்பான்".. வாய்க்கு வந்தபடி அணி நிர்வாகத்தை சாடிய ரவி சாஸ்திரி
"வைபவ் சூர்யவன்ஷி பேன்ட்டை உருவி இருப்பான்".. வாய்க்கு வந்தபடி அணி நிர்வாகத்தை சாடிய ரவி சாஸ்திரி
டர்ஹாம்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்ஹாம் நகரில் மழையால் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே முடிந்த நிலையில் கைவிடப்பட்டது. இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுகம் ஆகும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ந்து பிளேயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதை இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து ஏமாற்றமளித்த போதிலும், வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். இதுகுறித்து சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிகழ்ச்சியில் பேசிய ரவி சாஸ்திரி -
"அவர் அயர்லாந்துக்கு எதிரான தொடரிலேயே விளையாடியிருக்க வேண்டும். பெல்ஃபாஸ்ட்டின் மெதுவான ஆடுகளங்களில் அயர்லாந்து பந்துவீச்சை அவர் துவம்சம் செய்திருப்பார். அவனது அதிரடிக்கு அந்தச் சிறிய மைதானம் பந்து நேராக கூரைக்குச் சென்றிருக்கும். அவர்களின் பேன்ட்டை உருவி இருப்பார். அவர் அங்கு நிச்சயம் விளையாடி இருக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களையும் வெளுத்து வாங்கிய அவனை ஏன் இன்னும் பெஞ்சில் உட்கார வைத்து அழகு பார்க்கிறீர்கள்?" என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
வைபவ் சூர்யவன்ஷியின் திறமை குறித்து மேலும் பேசிய சாஸ்திரி, "அவர் அணியின் எக்ஸ்-ஃபேக்டர். எந்த ஒரு பயமும் இல்லாமல் விளையாடும் 15 வயது இளைஞன். முதல் 2 அல்லது 3 ஓவர்களிலேயே அவரால் அதிரடியான தொடக்கத்தைத் தர முடியும். அவருக்காக அணியில் இடத்தை உருவாக்க வேண்டும்" என்றார். வைபவ் சூர்யவன்ஷி அண்மையில் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 175 ரன்கள் குவித்து இந்தியாவுக்குக் கோப்பையை வென்று தந்தார். தொடர்ந்து ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்ற மிகக் குறைந்த வயது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
ஆனால், இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரையே தொடக்க வீரர்களாக களம் இறக்கி வருகிறது. இங்கிலாந்து தொடரில் இன்னும் 4 டி20 போட்டிகள் மீதமுள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷிக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.