தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அ.அருண் திடீர் மாற்றம்
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் | கோப்புப் படம்
சென்னை: தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குநர் அ.அருண் திடீரென மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. சி.மகேஸ்வரி கூடுதலாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பொறுப்பை வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.அருண் இனி தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளி இயக்குநராக பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தவெக தலைவரான விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு பிரிவு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தொடங்கியது.
அந்த வகையில், அரசு அமைந்தவுடனேயே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று அவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயலர் மணிவாசன் இடம்மாற்றம் குறித்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை இயக்குநராக ஏடிஜிபி அருண் பொறுப்பேற்ற பின்னர், அரசுத் துறைகளில் ஒருங்கிணைந்த ரெய்டு நடத்தி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஒவ்வொரு வாரமும் லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது. எனினும், முந்தைய திமுக ஆட்சியில், தன் மீது குறை கூறியவர்களைப் பழிவாங்கும் வகையில் நடந்துகொண்டதாக அருண் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தது கவனிக்கத்தக்கது.