Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி-
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
TN By-Election 2026: தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு ஜூலை 31 ஆம் தேதி வரை இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் முடிவு- தொடரும் ராஜினாமா
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே மாதம் வெளியானது. இதில் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக 53 இடங்களிலும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தது.
அதே நேரம் அதிமுகவில் இருந்து விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகில் இணைந்தனர். மேலும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்த காரணத்தால் அந்த தொகுதியிலும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே இரண்டு மாத காலத்திற்குள் தமிழகம் மீண்டும் 7 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அடுத்தடுத்து ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள்
இந்த பரபரப்பான சூழலில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. - எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. - சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள போது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் வழக்குகளில், தங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை முன்வைப்பதுண்டு. இடைத்தேர்தல் நடத்தி எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுத்த பின், தேர்தல் வழக்கை தாக்கல் செய்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்து விட்டால்,
ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதி என்ற நிலை ஏற்படும் என்பதால், தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என உச்ச நீதிமன்றம், 1967 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான பல்வேறு தேர்தல் வழக்குகளில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனால் தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை அந்த 5தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என தங்களுடைய வாதத்தை முன் வைத்தார்.
எந்த தேர்தல் வழக்கும் இல்லை
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் வழக்குகள் குறித்த ஆவணங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்துக்கு வரப்பெறவில்லை என்றும் அதனால், இந்த வழக்கில் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க இயலாது என வாதம் முன்வைக்கப்பட்டது. தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்யும் போது எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை என தெரிவித்தார்.
முதல்வர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளின் வாக்காளாராக இல்லாத மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்ய அடிப்படை உரிமை இல்லை என்றார். இடைத்தேர்தல் நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும் என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜனநாயக நடைமுறையில் புனிதம் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் மனுதாரரின் அடிப்படை உரிமை குறித்த கேள்வி பொருந்தாது. தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசன பிரச்சினை எழும் என குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராயவேண்டியுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.-க்கள் பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி