📅 Saturday, 11 July 2026 IST | ஆனி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 11, 2026 10:34 PM

IND vs ENG: எதிர்பார்க்காத அளவுக்கு அடி வாங்கிய இந்திய பவுலர்கள்.. துவம்சம் செய்த பட்லர், புரூக்

IND vs ENG: எதிர்பார்க்காத அளவுக்கு அடி வாங்கிய இந்திய பவுலர்கள்.. துவம்சம் செய்த பட்லர், புரூக்

IND vs ENG: எதிர்பார்க்காத அளவுக்கு அடி வாங்கிய இந்திய பவுலர்கள்.. துவம்சம் செய்த பட்லர், புரூக்

சவுதாம்ப்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி புரூக் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து 200 ரன்களுக்கும் மேல் கூட்டணி அமைத்து இந்திய பந்துவீச்சை சுக்குநூறாக உடைத்தனர்.

சவுதாம்ப்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் முடிவு முற்றிலும் தவறாக முடிந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீசினார்களா அல்லது ரன் வழங்கும் மெஷினாக மாறினார்களா என்று கேட்கும் அளவிற்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினர்.

சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் வீசிய 4 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 63 ரன்கள் விளாசப்பட்டன. மற்றொரு பந்துவீச்சாளரான பிரின்ஸ் யாதவ் 4 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 60 ரன்களை வாரி வழங்கினார். அறிமுக வீரர் சூர்யான்ஷ் ஷெட்கே 3 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவர்களில் பந்துவீசிய சிவம் துபே 1 ஓவர் மட்டுமே வீசி 22 ரன்களை வாரி இறைத்தார். ஆறுதலாக இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

அர்ஷ்தீப் சிங் விக்கெட் ஏதுமின்றி 33 ரன்களும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் எடுத்து 38 ரன்களும் கொடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர்களின் இந்த படுமோசமான செயல்பாடு ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் பிலிப் சால்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் ஹாரி புரூக் ஜோடி இந்திய பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிதறடித்தது. இந்திய பந்துவீச்சை அடியோடு காலி செய்த இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு வெறும் 102 பந்துகளில் 233 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்தது.

அதிரடியின் உச்சம் தொட்ட அனுபவ வீரர் ஜோஸ் பட்லர் 64 பந்துகளில் 12 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவருக்கு ஈடுகொடுத்து விளையாடிய கேப்டன் ஹாரி புரூக் 45 பந்துகளில் 4 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 95 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது.