சில்லரை இல்லை; அமைச்சரை பஸ்சிலிருந்து இறக்கிய கண்டக்டர்
பெங்களூரு: கர்நாடகாவில், அரசு பஸ்சில் முகக்கவசம் அணிந்து பயணித்த போக்கு வரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷை, சில்லரை இல்லை எனக்கூறி கண்டக்டர் கீழே இறக்கி விட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு போக்குவரத்துத் துறை அமைச்சராக பைரதி சுரேஷ் உள்ளார்.
அரசு பஸ்களில் பயணியருக்கு ஏதாவது பிரச்னை ஏற்படுகிறதா, டிரைவர் மற்றும் கண்டக்டரின் செயல்பாடுகள் எப்படி உள்ளது, பயணியரிடம் நல்ல முறையில் நடந்து கொள்கின்றனரா என்பதை அவர் அறிய விரும்பினார்.
அமைச்சராக சென்றால் பிரச்னைகளை தெரிந்து கொள்ள முடியாது என்பதால், நேற்று முன்தினம் சாதாரண உடையில், முகக்கவசம் அணிந்து, பல இடங்களில் அரசு பஸ்களில் பயணித்தார். பூபசந்தராவில் இருந்து, ஹெப்பாலுக்கு பஸ்சில் பயணித்தார்.
கண்டக்டரிடம், இரண்டு டிக்கெட் தரும்படி கேட்ட அமைச்சர் பைரதி சுரேஷ், 100 ரூபாய் கொடுத்தார். இவரை அமைச்சர் என்பதை அறியாத கண்டக்டர், 12 ரூபாய் சில்லரையாக தரும்படி கேட்டார். சில்லரை இல்லை என, அமைச்சர் பைரதி சுரேஷ் கூறியதால், அவரை பஸ்சில் இருந்து கீழே இறங்கும்படி கண்டக்டர் கூறினார்.
அதிருப்தி அடைந்த அமைச்சர் பைரதி சுரேஷ், முகக்கவசத்தை அகற்றி கண்டக்டரை கண்டித்தார். பஸ்சை எடுக்கும் முன்பே, தேவையான சில்லரையை வைத்திருக்க வேண்டும் என, உத்தரவிட்டார். பஸ்சில் பயணித்தது அமைச்சர் என்பதை அறிந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதே போல, ஜெயமஹால், ஹென்னுார் டிப்போ உட்பட பல இடங்களுக்கு பஸ்சில் பயணித்து, அமைச்சர் ஆய்வு செய்தார் .
பயணியரிடம் கடுமையாக நடந்து கொண்ட கண்டக்டர்களை எச்சரித்தார். பயணியரின் பிரச்னைகளை கேட்டறிந்தார். சரியாக பணியாற்றாத சில அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்தார். நிறுத்தத் தில் பஸ்சை நிறுத்தாமல் சென்ற டிரைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.