📅 Saturday, 11 July 2026 IST | ஆனி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news July 11, 2026 03:34 AM

அங்கன்வாடியில் மகனை சேர்த்த பெரம்பலூர் கலெக்டர்: பொதுமக்கள் வரவேற்பு

அங்கன்வாடியில் மகனை சேர்த்த பெரம்பலூர் கலெக்டர்: பொதுமக்கள் வரவேற்பு

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சரண்யா அறி தனது மகனை அங்கன்வாடியில் சேர்த்திருப்பது பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக சரண்யா அறி கடந்த மாதம் 1-ந்தேதி பொறுப்பேற்றார். அதற்கு மறுநாள் அவர் எசனை ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை திடீரென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் சரண்யா அறி குழந்தைகளின் பெற்றோர்களிடம் கலந்துரையாடியபோது, அங்கன்வாடி மையம் நன்றாக செயல்பட்டு வருவதால் நானும் எனது குழந்தையை அங்கன்வாடியில்தான் சேர்க்க போகிறேன் என்று கூறியிருந்தார்.

பொதுமக்கள் வரவேற்பு

குழந்தைகளின் பெற்றோர்களும் கலெக்டரிடம் அங்கன்வாடியில் குழந்தையை சேருங்கள் நன்றாக பார்த்து கொள்வார்கள், என்றனர். அங்கன்வாடியில் கலெக்டர் தனது குழந்தையை சேர்க்க போகிறேன் என்று பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.

மகனை அங்கன்வாடி மையத்தில் சேர்த்த கலெக்டர்

இந்த நிலையில் கலெக்டர் சரண்யா அறி ஏற்கனவே கூறியபடி தனது 2-வது ஆண் குழந்தையான 2 வயதுடைய ஆத்விக்கை பெரம்பலூர் ஒன்றியம், நொச்சியம் ஊராட்சிக்குட்பட்ட விளாமுத்தூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமீபத்தில் சேர்த்துள்ளார்.

மகனை பார்க்க அங்கன்வாடிக்கு சென்ற கலெக்டர்

நேற்று காலை அரசு பணிகளை முடித்து கொண்டு அந்த வழியாக காரில் வந்த கலெக்டர் சரண்யா அறி விளாமுத்தூர் அங்கன்வாடி மையத்திற்கு சென்று தனது மகனை பார்த்தார். மகனின் செயல்பாடுகளை அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் அங்குள்ள மற்ற குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சரண்யா அறி தனது குழந்தையை அங்கன்வாடியில் சேர்த்திருப்பது பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.