வைபவ் சூர்யவன்ஷியின் வீக்னஸ் தெரிஞ்சு போச்சு.. ஐபிஎல் டேட்டா
வைபவ் சூர்யவன்ஷியின் வீக்னஸ் தெரிஞ்சு போச்சு.. ஐபிஎல் டேட்டா-வை வைத்து வீழ்த்திய இங்கிலாந்து
நாட்டிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருக்கிறார். இந்த நிலையில், இங்கிலாந்து அணி வைபவ் சூர்யவன்ஷியின் பலவீனத்தை கண்டுபிடித்து அவரை வீழ்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து மண்ணில் சர்வதேச அறிமுகம் பெற்ற வைபவ் சூர்யவன்ஷி தனது அறிமுகப் போட்டியில் 14 ரன்கள், இரண்டாவது போட்டியில் 13 ரன்கள், மூன்றாவது போட்டியில் 10 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். வைபவ் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதை அடுத்து வைபவின் பலவீனத்தை இங்கிலாந்து அணி கண்டுபிடித்து விட்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்துப் பேசிய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித், "வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டிற்குப் புதியவர் என்றாலும், அவரது ஐபிஎல் ஆட்டங்களை வைத்து அவரிடம் உள்ள தரவுகளை எங்களது குழுவினர் ஆராய்ந்தனர். அவர் எங்குத் தடுமாறுகிறார் என்பதை அறிந்து, அதற்கேற்பவே பந்துவீச்சுத் திட்டங்களைச் செயல்படுத்தினோம்" என்றார்.
மேலும் பேசிய ரஷித், "அவருக்கு வெறும் 15 வயது தான் ஆகிறது என்பதால் அவர் மீது அழுத்தம் இருப்பது இயல்புதான். ஆனால் இந்திய அணி நிர்வாகம் அவருக்குத் தன்னிச்சையாக விளையாடும் முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளது. பல்வேறு மைதானங்களின் தன்மைக்கு ஏற்ப அவர் விளையாடிப் பழகும்போது தற்காப்பு முறைகளைக் கற்றுக்கொள்வார்" என்று அறிவுறுத்தினார்.
இதற்கிடையே, வைபவ் சூர்யவன்ஷியின் சொதப்பலான ஆட்டம் குறித்துப் பேசிய இங்கிலாந்து முன்னாள் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, "வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழக்கும் விதத்தை நான் அவரது பலவீனமாகப் பார்க்கவில்லை. இதுபோன்ற பந்துகளை அவர் சிக்ஸராகப் பறக்கவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே அவரைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அவர் இன்னும் 3 அல்லது 5 போட்டிகளில் ரன் குவிக்கத் தவறினால் மட்டுமே அது அவருக்குப் பிரச்சனையாக மாறும். தற்போதைய நிலையில் அவர் மிகவும் திறமையான வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை" என்று கூறி இருக்கிறார்.