கடைசி பந்தில் தோற்ற இந்திய அண்டர் 19 அணி.. சீனியர்களைத் தொடர்ந்து ஜூனியர்களும் சொதப்பல்
கடைசி பந்தில் தோற்ற இந்திய அண்டர் 19 அணி.. சீனியர்களைத் தொடர்ந்து ஜூனியர்களும் சொதப்பல்
கொழும்பு: இலங்கை அண்டர்-19 அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், கடைசி பந்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அண்டர்-19 அணி தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. ஏற்கனவே சீனியர் இந்திய அணி இங்கிலாந்திடம் டி20 தொடரை இழந்த நிலையில், தற்போது ஜூனியர் இந்திய அணியும் தொடரை இழந்து ஏமாற்றம் அளித்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 291 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணிக்குக் கடைசி ஓவரில் வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டன. கையில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததால் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.
இந்திய பந்துவீச்சாளர் மோஹித் உல்வா வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தில் சமிகா ஹேனட்டிகலா பவுண்டரி அடித்தார். தொடர்ந்து 5-வது பந்தில் இமாலய சிக்ஸர் அடித்து ஸ்கோரைச் சமன் செய்தார். ஆட்டத்தின் கடைசி பந்தில் 1 ரன் எடுத்து இலங்கை அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வைத்தார். சமிகா 68 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்று ஒரே நாளில் இரட்டை ஏமாற்றம் ஏற்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து சீனியர் இந்திய அணி தொடரை இழந்தது. அதற்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே, ஜூனியர் இந்திய அணியான அண்டர்-19 அணியும் தங்களது கடைசி போட்டியில் தோற்று தொடரை 1 - 2 என கோட்டைவிட்டுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அண்டர்-19 அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் குவித்தது. வி.கே. வினீத் சதம் அடித்து 131 ரன்கள் குவித்தார். லக்ஷ்யா ராய்சந்தானி 61 ரன்கள் குவித்தார். இந்திய பந்துவீச்சில் அன்மோல்ஜீத் சிங் 4 விக்கெட்டுகளையும், ஷாவின் வினோத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய வீரர்களின் செயல்பாடு நன்றாக இருந்த போதும் கடைசி ஓவரில் ஏற்பட்ட பந்துவீச்சு சொதப்பலால் தோல்வி ஏற்பட்டது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.