"வைபவ் சூர்யவன்ஷியை ரொம்ப புகழாதீங்க.. ஏன்னா டெஸ்ட் மேட்ச் ஆடும்போது.." கபில் தேவ் எச்சரிக்கை
"வைபவ் சூர்யவன்ஷியை ரொம்ப புகழாதீங்க.. ஏன்னா டெஸ்ட் மேட்ச் ஆடும்போது.." கபில் தேவ் எச்சரிக்கை
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுக ஆட்டம் குறித்துப் பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில், அவருக்கு அளவுக்கு அதிகமான அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கபில் தேவ், "வைபவ் சூர்யவன்ஷி உலகின் மிகச்சிறந்த திறமையை உடைய இளம் வீரர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரை இப்போதே அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து, அவருக்குத் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்காதீர்கள். இந்த இளம் வயதில் எவை சரி, எவை தவறு என்று கூட அவருக்குத் தெரியாது. அவர் சச்சின் டெண்டுல்கர் அல்லது விராட் கோலி போன்ற திறமைகளைக் கொண்டவர், ஆனால் டி20 கிரிக்கெட்டில்" என்று கூறினார்.
மேலும், வைபவ் சூர்யவன்ஷி டி20 கிரிக்கெட்டைத் தாண்டி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று கபில் தேவ் கூறினார். "அவர் ஒரு சிறந்த டி20 பேட்டர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும்போதுதான் அவரது மனநிலை மற்றும் பேட்டிங் உத்திகள் உண்மையான சோதனைக்கு உள்ளாகும். அங்கு வரும் கடினமான சூழ்நிலைகளை இந்த இளம் சிறுவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில் இந்திய அணியில் அறிமுகமானதைச் சுட்டிக்காட்டிய கபில் தேவ், அணி நிர்வாகம் வீரரின் வயதை பார்க்காமல் அவரது திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். வைபவ் சூர்யவன்ஷி அண்மையில் ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி 700-க்கும் அதிகமான ரன்களைக் குவித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வைபவ் சூர்யவன்ஷி ஒருநாள் போட்டி அணியில் கூட இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அவர் இன்னும் அதிக உள்ளூர் போட்டிகளில் ஆடவில்லை. இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் அவர் ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்நாட்டு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்தால் மட்டுமே இந்திய டெஸ்ட் அணியில் நுழைய முடியும்.