தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி அதிகரிக்கும்
சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று முதல் 18-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூலை 13) முதல் 18-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 16-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை உயரக்கூடும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிக
பட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.