தேசிய ஒற்றுமைக்கு மொழி நல்லிணக்கம் அவசியம்: ‘காசி தமிழ் சங்கமம்’ விழாவில் ஆளுநர்
சென்னை: தேசிய ஒருமைப்பாடு மேம்பட மொழி நல்லிணக்கம் அவசியம் என்று காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வலியுறுத்தினார்.
தமிழகத்துக்கும் வட இந்தியாவில் உள்ள காசிக்கும் இடையேயான கலாச்சார, வரலாற்று உறவுகளை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு காசி தமிழ்ச் சங்கமம் என்ற சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்நிகழ்ச்சியின் 4-வது பதிப்பு (காசி தமிழ்ச் சங்கமம் 4.0) கடந்த ஆண்டு டிசம்பர் 2 முதல் 15 வரை நடைபெற்றது. இதை சென்னை ஐஐடியும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் ஒருங்கிணைப்பு செய்தன.
இந்நிலையில், காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு விழா கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமை தாங்கிப் பேசியதாவது: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியானது தேசிய ஒருமைப்பாட்டையும், கலாச்சார ஒற்றுமையையும் பலப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடியின் மனதில் உதித்த ஒரு தொலைநோக்கு திட்டமாகும்.
இத்திட்டத்தை தமிழகத்தில் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திய முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவியை பாராட்டுகிறேன். இந்த திட்டம் வாயிலாக தமிழகத்திலிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காசி சென்று வந்துள்ளனர்.
இந்தியாவின் ஒருமைப்பாடு வலுப்பட வேண்டுமானால் ஒரு பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்ற பகுதியினர் பேசும் மொழியை கற்க வேண்டும். உதாரணத்துக்கு வட இந்திய மக்கள் குறைந்தபட்சம் தென்னிந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோல் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு வட இந்திய மொழியை படிக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டின் மேம்பாட்டுக்கு மொழி நல்லிணக்கம் அவசியமானது.
ஒரு மொழியை கற்பதால் என்ன சிரமம் என்று எனக்கு தெரியவில்லை. புதிய மொழியை கற்பது கலாச்சார பிணைப்புகளை மேம்படுத்துவதில் ஒரு பாலமாக அமையும்.
இந்தியா பன்முக கலாச்சாரங்களின் ஒரு தொகுப்பு அல்ல. மாறாக பலதரப்பட்ட பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் ஓர் ஒருங்கிணைந்த நாகரிகம் ஆகும். எப்போதெல்லாம் இந்தியா ஒற்றுமையாக இருந்திருக்கிறதோ அப்போதெல்லாம் அது மிகப்பெரிய சாதனைகளைப் படைத்துள்ளது.
பிரிவினை ஏற்பட்டால் நாடு துண்டாகிவிடுகிறது என்பதை வரலாறு நமக்கு தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு ஆளுநர் பேசினார்.
இவ்விழாவில் ஆளுநரின் செயலர் சஜன்சிங் ஆர்.சவான், ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, மத்திய தமிழ் செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.