நாங்கள் ஆதரவு தரவில்லை என்றால் மே 10ல் பதவியேற்பு விழாவே நடந்திருக்காது; சொல்கிறார் சண்முகம்
சென்னை: தவெகவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவிலலை என்றால் மே 10ம் தேதி பதவியேற்பு விழா நடந்திருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறி உள்ளார்.
அவரது பேட்டி;
நாங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டும் தான் வெளியில் இருந்து ஆதரவு என்பதை பகிரங்கமாக, வெளிப்படையாக கட்சியின் மாநில குழு தெரிவித்தது.
ஒன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி அமைய வேண்டும். அதற்கான வாய்ப்பு தவெகவுக்கு தான் இருக்கிறது. ஏன் என்றால் அவர்கள் தான் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சியாக இருக்கின்றனர்.
சட்டப்படியும் அவர்களுக்கு தான் வாய்ப்பு. அதுதான் முதல் காரணம். இரண்டாவது ஒருவேளை நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றால் அன்றிருந்த சூழ்நிலையில் ( மே 8 மற்றும் மே 9 தேதிகளை குறிப்பிடுகிறார்) நாங்கள் ஆதரிக்காமல் போயிருந்தால் மே 10ம் தேதி பதவியேற்பு என்பதே நடந்திருக்காது.
அதற்கு மாற்றாக மே 10ம் தேதிக்கு பின்னர் ஜனாதிபதி ஆட்சி என்பது இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும். பாஜ தமிழகத்தில் கால் ஊன்றக்கூடாது என்பதற்காக தான், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
அப்படி இருக்கும் போது பாஜ ஆட்சி என்ற பெயரில் மறைமுகமாக ஜனாதிபதி ஆட்சி இங்கு என்பதை எங்களால் ஏற்க முடியாது. ஆகவே அதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தவெகவக்கு வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். அது எங்களின் அரசியல் நிலைப்பாடு
இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.