”கட்சி நடக்கிறதா? நடத்துகிறோமா? என்பதே தெரியாவதவர் இபிஎஸ்..”
”கட்சி நடக்கிறதா? நடத்துகிறோமா? என்பதே தெரியாவதவர் இபிஎஸ்..” – தவெக பதிலடி
இரவல் ஆட்சி நடந்துக் கொண்டிருப்பதாக தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனத்திற்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது.
தவெக அரசு குறித்து விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை குதிரை பேரம் செய்து கட்சியில் சேர்த்துள்ளனர். பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை இரவல் வாங்கி முதல்வர் விஜய் ஆட்சி நடத்துகிறார். திமுக - அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை. திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது" என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தவெக, "கட்சி நடக்கிறதா, கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர், ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது. திமுகவுடன் இணைந்து கூட்டுக் ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர், மனசாட்சி உள்ள மக்களாட்சியை 'இரவல் ஆட்சி' என்று விமர்சிப்பது அடக்க முடியாத சிரிப்பை ஏற்படுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "கொடநாடு கொலை வழக்கைப் பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள், தவெக அரசை குறைகூறுவது குபீர் சிரிப்பு காமெடியாக உள்ளது. கட்சியே துண்டு துண்டாகச் சிதறி வருவதை உணராமல் இதுபோன்ற பேட்டிகளை வழங்குவதற்குப் பதிலாக, முதலில் தங்களது கட்சியைக் காப்பாற்றும் பணியில் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் தவெக தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக Vs தவெக மோதல் இணையத்தில் வெடித்துள்ளது.