சென்னையில் பிக் பாஷ் லீக்.. மோடி முன்னிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு.. வரலாற்றில் முதல்முறை
சென்னையில் பிக் பாஷ் லீக்.. மோடி முன்னிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு.. வரலாற்றில் முதல்முறை
சென்னை: வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில், குறிப்பாகச் சென்னையில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 3 நாள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இறுதி நாளில், இரு நாட்டுப் பிரதமர்களும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
2026-27 பிக் பாஷ் லீக் சீசனின் தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான விளையாட்டு மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, "கிரிக்கெட் என்பது இரு நாடுகளுக்கும் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது இரு நாட்டு மக்களின் உணர்வுபூர்வமான இணைப்பு" என்று குறிப்பிட்டார்.
டிசம்பர் மாதம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த முதல் லீக் போட்டியில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் ஆகிய இரு அணிகள் மோதவுள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு வெளியே ஒரு பிக் பாஷ் லீக் போட்டி அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். அதேபோல், வெளிநாட்டு கிரிக்கெட் லீக் போட்டி ஒன்று இந்தியாவில் நடத்தப்படுவதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ இந்த வரலாற்று நிகழ்வுக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இந்த போட்டியை நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவில் பிக் பாஷ் லீக் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை 'ஜியோஸ்டார்' நிறுவனம் 2030-ம் ஆண்டு வரை பெற்றுள்ளது. இந்த போட்டியை ஒட்டி ஆஸ்திரேலிய அரசு மற்றும் இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகளுக்கான மையம் ஒன்றிணைந்து சென்னையில் கலை, திரைப்படம் மற்றும் கலாச்சார விழாக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
இது குறித்து பிக் பாஷ் லீக்கின் பொது மேலாளர் அலிஸ்டர் டாப்சன் கூறுகையில், "இந்திய ரசிகர்களுக்குப் பிக் பாஷ் அனுபவத்தை நேரடியாக வழங்கவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மைதானத்தை முழுமையாக நிரப்பி, இசை மற்றும் கொண்டாட்டங்களுடன் இந்த போட்டியை ஒரு திருவிழாவாக நடத்த விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.