இந்திய கிரிக்கெட் அணியின் ஆசிய விளையாட்டு போட்டி ஜெர்சியில் குளறுபடியா? உண்மையை உடைத்த JSW நிறுவனம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆசிய விளையாட்டு போட்டி ஜெர்சியில் குளறுபடியா? உண்மையை உடைத்த JSW நிறுவனம்
நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்ட உடைகள் சரியான அளவில் இல்லை என்றும், இதனால் பிசிசிஐ மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே சர்ச்சை வெடித்ததாகவும் செய்திகள் பரவின.
இந்தச் செய்திகளை இந்திய அணிக்கு ஆடைகளைத் தயாரித்து வழங்கிய ஜே.எஸ்.டபிள்யூ இன்ஸ்பயர் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது முற்றிலும் ஆதாரமற்ற வதந்தி என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான உடைகள் அனைத்தையும் பல நாட்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட அணி மேலாளர்களிடம் முறையாக ஒப்படைத்துவிட்டோம். உடைகள் அனைத்தும் சரியான அளவில் இருப்பதை அவர்களும் சரிபார்த்து உறுதி செய்துவிட்டனர். செப்டம்பர் 26 அன்று இந்திய ஆடவர் அணி டோக்கியோவில் இருந்து நகோயா நகருக்குப் பயணிக்கும் போது இந்த உடைகளை அணிந்து செல்லும்" என்று தெளிவுபடுத்தினார்.
இந்திய ஆடவர் அணி செப்டம்பர் 22 அன்று ஜப்பான் அணிக்கு எதிராக ஒரு நட்புரீதியான டி20 போட்டியில் விளையாடுகிறது. அதன்பின்னர் செப்டம்பர் 28 அன்று ஆசிய விளையாட்டின் முக்கியப் போட்டியில் களம் காண்கிறது. முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருடன் இணைந்து தேசியக் கொடியை ஏந்திச் செல்ல வேண்டிய குண்டு எறியும் வீரர் தஜிந்தர்பால் சிங் டூருக்கு பதிலாக, கபடி வீரர் பவன் ஷெராவத் கடைசி நேரத்தில் நியமிக்கப்பட்டார். தஜிந்தர்பால் சிங் டூருக்கு தொடக்க விழாவுக்கான பாரம்பரிய உடை கிடைக்காததே இதற்குக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்தும் விளக்கம் அளித்த தயாரிப்பு நிறுவனம், "தொடக்க விழாவில் அணிந்து செல்லும் பாரம்பரிய ஆடைகளைத் தயாரிக்கும் பொறுப்பு எங்களுடையது அல்ல. போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதற்கான ஆடைகளை மட்டுமே நாங்கள் உரிய நேரத்தில் அந்தந்த விளையாட்டு அமைப்புகளிடம் வழங்கிவிட்டோம்" என்று விளக்கம் அளித்தது.