வைபவ் சூர்யவன்ஷி இருக்கும்போது சஞ்சு சாம்சன் செய்த சொதப்பல்.. ஆப்கானிஸ்தான் டி20 போட்டியில் ஏமாற்றம்
வைபவ் சூர்யவன்ஷி இருக்கும்போது சஞ்சு சாம்சன் செய்த சொதப்பல்.. ஆப்கானிஸ்தான் டி20 போட்டியில் ஏமாற்றம்
டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய துவக்க வீரர் சஞ்சு சாம்சன் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார். இதனால் இந்திய அணியில் அவரது துவக்க வீரர் இடத்திற்கு இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். ஆனால் 3-வது ஓவரின் முதல் பந்திலேயே அஸ்மத்துல்லா ஒமர்சாய் வீசிய பந்தை அவசரப்பட்டு தூக்கி அடித்து, தர்விஷ் ரசூலியிடம் கேட்ச் கொடுத்து 8 பந்துகளில் 10 ரன்களுடன் வெளியேறினார்.
ஏற்கனவே ஜிம்பாப்வே தொடரில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 2 அரைசதங்கள் விளாசி தொடர் நாயகன் விருதை வென்று துவக்க வீரராக தனது இடத்தை நிரூபித்திருந்தார். இந்த ஆப்கானிஸ்தான் தொடரில் வைபவ் மாற்று வீரராக பெஞ்சில் அமர வைக்கப்பட்டு, சஞ்சு சாம்சனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால், தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் நழுவவிட்டுள்ளார்.
விரைவில் ஜப்பானில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் துவக்க வீரராக யார் களமிறங்குவது என்பதை இந்த ஆப்கானிஸ்தான் தொடரே தீர்மானிக்கும். அடுத்து ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் 2-வது போட்டியிலும் சஞ்சு சாம்சன் சொதப்பினால், 3-வது போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்பதால் சஞ்சு சாம்சனுக்கு அதிக அழுத்தம் உருவாகியுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.