தூத்துக்குடி: பள்ளி மாணவனை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பை தாக்கி சித்ரவதை; 9 மாணவர்கள் போக்சோவில் கைது
தூத்துக்குடி: பள்ளி மாணவனை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பை தாக்கி சித்ரவதை; 9 மாணவர்கள் போக்சோவில் கைது
தூத்துக்குடியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவருக்கு ஓராண்டுக்கும் மேலாக பாலியல் துன்புறுத்தல் அளித்த சக மாணவர்கள் 9 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவரின் பெற்றோர், தன் மகனுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், ”எனது மகனை இதே வகுப்பில் பயிலும் 9 மாணவர்கள் அவ்வப்போது ராகிங் செய்து வந்துள்ளனர். அத்துடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக என் மகனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான என் மகன் பல நாட்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தான்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு என் மகனுக்கு உடல் நிலை பாதிக்கபட்டபோது அவனிடம் விசாரித்தோம். அப்போதுதான் சக மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததை தெரிந்து கொண்டோம். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவரை வகுப்பறையில் நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் ரப்பர் பேண்ட், ஸ்கேல் ஆகியவற்றால் கொடூரமாக அடித்துள்ளனர். மிளகாய் பொடி தூவியும், பபிள் கம் ஒட்டியும் சித்ரவதை செய்துள்ளனர். இதனையடுத்து 9 மாணவர்களையும் கைது செய்த போலீஸார் தூத்துக்குடி சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டையில் உள்ள இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
வகுப்பறையில் மாணவர் ஒருவருக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தலைமை ஆசிரியருக்கு தெரிய வந்தும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராணியிடம் பேசினோம், “கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் எங்களுக்கு இந்த தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் கிராபட் வகுப்பின் போது ஆசிரியருக்கு தெரிந்துள்ளது. அவர்தான் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு தகவல் கூறியுள்ளனர். இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியரிடம் விளக்க அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.