📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 24, 2026 09:31 PM

தாய்மாமன் சீர் வேண்டாம்...? விஜய்க்கு திருமா கோரிக்கை..!

தாய்மாமன் சீர் வேண்டாம்...? விஜய்க்கு திருமா கோரிக்கை..!

தாய்மாமன் சீர் வேண்டாம்...? விஜய்க்கு திருமா கோரிக்கை..!

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்களவை எம்.பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை' அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழக முதலமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தமிழர் பாரம்பரியத்தில், ‘தாய்மாமன் சீர்’ என்ற மரபின்படி, தமிழக முதல்வர், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது” என்று அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

இந்த நிலையில், இத்திட்டம் குறித்து விசிக தலைவரும் நாடாளுமன்ற எம்.பியுமான திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”தமிழகத்தில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளிலும், மீதமுள்ள 44 சதவீதம் தனியார் மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது. அதிக கட்டணம் இருந்தபோதிலும், தாய்-சேய் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏழை, எளிய மக்கள்கூட தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர். இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.755 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள தங்க மோதிரத் திட்டத்துக்குப் பதிலாக, அந்த நிதியை அரசு மருத்துவமனைகளின் பிரசவ வார்டுகளை தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்தவும், தேவையான மருத்துவப் பணியாளர்களை நியமிக்கவும் பயன்படுத்தலாம்” என்று திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், பிறந்த குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் தங்க மோதிரம், சில மாதங்களிலேயே குழந்தைகளின் கைகளுக்கு பொருந்தாமல் போய்விடும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.