பழனி கோவில் விடுதிகளில் கட்டணக் கொள்ளை; தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
திருநெல்வேலி:பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான விடுதிகளின் கட்டணத்தை உயர்த்தியதற்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் விடுதிகளின் கட்டணங்களை இன்று (ஜூலை 13) முதல் ஜோசப் விஜய் அரசு வரலாறு காணாத வகையில் ரூ. 300 முதல் ரூ. 1,500 வரை உயர்த்தி, அறைகள் இன்றி அவதியுறும் ஏழை முருகப் பக்தர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் இந்த அநியாயக் கட்டணக் கொள்ளையை பாஜ வன்மையாகக் கண்டிக்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் கோவில்களைத் தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்திருப்போம் என வீராப்பு பேசிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ஏழை எளிய முருகப் பக்தர்களுக்கு வழங்கும் பரிசு இதுதானா? பராமரிப்புச் செலவு என்ற வெற்று மழுப்பல் காரணத்தைக் கூறி, ஆன்மிகத் தலங்களை வெறும் வருவாய் ஈட்டும் வணிகக் கூடங்களாக மட்டுமே பார்க்கும் ஜோசப் விஜய் அரசின் போக்கு வெளிப்பட்டுள்ளது.
எனவே, உயர்த்தப்பட்ட தங்குமிடக் கட்டணத்தைத் தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெறவதோடு, போதிய தங்குமிட வசதி இல்லாத சூழலைப் பயன்படுத்தித் தனியார் விடுதிகள் நடத்தும் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழைப் பக்தர்களைப் பாதுகாக்கத் தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.