📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 14, 2026 07:34 PM

காவல் மரணம்: சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகிக்கு ஒரு சட்டமா?

காவல் மரணம்: சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகிக்கு ஒரு சட்டமா?

காவல் மரணம்: சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகிக்கு ஒரு சட்டமா? - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

உடல்நலக்குறைவால் தான் உயிரிழந்தார் என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், அதனை ஏற்க சபரிவர்மனின் குடும்பத்தார் மறுத்துவிட்டனர்.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருளான குட்கா விற்பனை செய்ததாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்டபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மரணமடைந்திருக்கிறார்.

அவர் உடல்நலக்குறைவால் தான் உயிரிழந்தார் என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், அதனை ஏற்க சபரிவர்மனின் குடும்பத்தார் மறுத்துதிருக்கின்றனர்.

மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் கடுமையான காயங்கள் இருந்ததாகக் கூறும் அவரது குடும்பத்தினர், அவரை மாற்றுத்திறனாளி என்று கூடப் பாராமல் காவல்துறையினர் அடித்துக் கொடுமைப்படுத்தி, சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து திமுக இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன்.

கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்.

சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர்.

சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது.

இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.

சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.