📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 10, 2026 06:30 AM

போதைப்பொருள் கடத்தல் டான் ஜான் பிரிட்டோ!

போதைப்பொருள் கடத்தல் டான் ஜான் பிரிட்டோ!

போதைப்பொருள் கடத்தல் டான் ஜான் பிரிட்டோ! - அமலாக்கத்துறையின் அதிர்ச்சித் தகவல்கள்

மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ, கோவையைச் சேர்ந்தவர். இவர்மீது 2011-ல் நில மோசடி வழக்கு இருக்கிறது.

தமிழகத்தை அரிக்கும் போதைக் கலாசாரத்துக்கு இறுதியுரை எழுத முடியாமல், போதை தடுப்புப் பிரிவு தள்ளாடிவருகிறது. இந்த நிலையில், மெத்தாம்பேட்டமைன் எனும் போதைப் பொருளுக்கு மூளையாகச் செயல்படுவது ஜான் பிரிட்டோ என்று அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், அந்தப் பெயர்கொண்ட நபர் லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தின் உறவினர் என்று தி.மு.க ஐடி விங் உட்பட சில மீடியாக்கள் செய்திகளைத் தெறிக்கவிட்டதுதான்.

இது பற்றி விசாரிக்கக் களமிறங்கினோம். 2024-ம் ஆண்டு கடலோர பாதுகாப்புக் குழுமமும் ,மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து மன்னார் வளைகுடா பகுதியில் நடத்திய சோதனையில் 108 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது. அதன் தொடர்ச்சியாக மதுரை ரயில் நிலையத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான 37 கிலோ மெத்தாம்பேட்டமைனுடன் இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக 26.5.2026 அன்று சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, ‘போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்படுவது ஜான் பிரிட்டோ’ என்றும், ‘இவர் இலங்கையிலிருந்து கடல்வழியாக போதைப்பொருள், ஹவாலா பணம் பரிமாற்றத்தில் ஈடுபடுகிறார்’ என்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

இதை வைத்துத்தான், தி.மு.க ஐடி விங் உள்ளிட்ட சில மீடியாக்கள் ஜான் பிரிட்டோ என்பவர், லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தின் உறவினர் என்று குறிப்பிட்டு, த.வெ.க அரசுக்கு எதிராகப் புயலைக் கிளப்பின.

இது தொடர்பாக மார்ட்டின் குடும்பத்தினர் கூறுகையில், ``எங்கள் குடும்பத்துக்கும், போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால், தி.மு.க ஐடி விங், அரசியலுக்காக பொய்த் தகவல் பரப்பியிருக்கிறது. உண்மை தெரியாமல் பேசுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.