அமோனியா வாயு கசிவால் பலி 16 ஆக உயர்வு; ஆலைக்கு சீல் வைக்க முடிவு
அமோனியா வாயு கசிவால் பலியானோர் எண்ணிக்கை, 16 ஆக உயர்ந்துள்ள நிலையில், ''இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு ஒரு வாரத்தில் 'சீல்' வைக்கப்படும்,'' என, திருவள்ளூர் கலெக்டர் கவிதா தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் கிராமத்தில், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், கடந்த 21ம் தேதி அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் ஒடிஷா, அசாம், ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்தவர்கள்.
இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா கூறியதாவது: தொழிற்சாலையில் இருந்த, 400 டன் உணவில், 300 டன் அகற்றப்பட்டு விட்டது. மீதமுள்ளவைஅகற்றும் பணி நடக்கிறது. அங்குள்ள, 2 டன் அம்மோனியா வாயுவை அகற்ற அனைத்து துறை அதிகாரிகள் கூட்டு முயற்சி செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிப்பு வெயிடப்படும். அம்மோனியா வாயு மற்றும் உணவு கழிவுகள் அகற்றப்பட்டு, ஒரு வாரத்தில் தொழிற்சாலைக்கு, 'சீல்' வைக்கப்படும்.சிறுவர்கள் பணியில் ஈடுபட்டதற்கான ஆதார் அட்டை உள்ளது. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.