"இந்திய அணியை இப்படிதான் வீழ்த்தினோம்".. வெற்றிக்குப் பின் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் பெருமிதம்
"இந்திய அணியை இப்படிதான் வீழ்த்தினோம்".. வெற்றிக்குப் பின் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் பெருமிதம்
நாட்டிங்ஹாம்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றதும், அதற்கான காரணம் குறித்தும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பெருமிதமாக பேசி இருக்கிறார். இந்தப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்த நடந்த திட்டமிடல் பற்றியும் அவர் கூறினார்.
நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 201 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 202 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, வெறும் 76 ரன்களுக்குச் சுருண்டது. இந்த 125 ரன்கள் இமாலய வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என பலமான முன்னிலை பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், "ஆட்டத்தின் இரண்டாவது பாதிக்கு செல்லும்போது எங்களின் திட்டங்களும் தகவல் பரிமாற்றமும் சரியாக இருந்தன. பேட்டிங்கில் நாங்கள் எங்களை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டோம். அதை பந்துவீச்சிலும் அப்படியே கொண்டு சென்றது அருமையான விஷயமாகும். பிலிப் சால்ட் ஒரு மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார், ஜோஸ் பட்லரும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். கடினமான இந்த பிட்ச்சில் நாங்கள் 200 ரன்களை எட்டியது அசாதாரணமான ஒன்றாகும்" என்று கூறினார்.
இந்திய அணியின் சேஸிங் குறித்துப் பேசிய புரூக், "இந்திய அணி விளையாடுவதற்கு முன்பாக நாங்கள் அதிகம் பேசவில்லை. ஸ்டம்புகளுக்கு மேலே தொடர்ந்து பந்துவீசி, எப்போதாவது பவுன்சர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களது திட்டமாக இருந்தது. அதை எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சரியாகச் செயல்படுத்தினர். மைதானத்தின் தன்மையை உணர்ந்து பேட்ஸ்மேன்கள் பல்வேறு பகுதிகளில் ரன் குவிப்பது ஒரு பேட்டிங் யூனிட்டாக எங்களுக்கு மிகவும் முக்கியம்" என்றார்.
"தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் இதேபோன்று மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாட வேண்டும்" என்றும் ஹாரி புரூக் குறிப்பிட்டார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியாவை நிலைகுலையச் செய்தனர். பேட்டிங்கில் பிலிப் சால்ட் 44பந்துகளில் 70 ரன்களும், பட்லர் 21 பந்துகளில் 36 ரன்களும், சாம் கர்ரன் 24 பந்துகளில் 41 ரன்களும் குவித்தனர்.