அர்ஜென்டினா வெற்றியில் சர்ச்சை.. எகிப்து பயிற்சியாளர் ஆவேசம்.. நடுவர்கள் மீது சரமாரி புகார்
அர்ஜென்டினா வெற்றியில் சர்ச்சை.. எகிப்து பயிற்சியாளர் ஆவேசம்.. நடுவர்கள் மீது சரமாரி புகார்
அட்லாண்டா: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரில் அர்ஜென்டினாவுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் 3-2 என்ற கணக்கில் எகிப்து அணி அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, போட்டி நடுவர்கள் மற்றும் பிஃபா அமைப்பின் மீது எகிப்து பயிற்சியாளர் ஹோசாம் ஹசன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அட்லாண்டாவில் நடைபெற்ற இப்போட்டியின் ஒரு கட்டத்தில் எகிப்து 2-0 என முன்னிலை வகித்தது. ஆனால், கடைசி 12 நிமிடங்களில் 2 கோல் மற்றும் கூடுதல் நேரத்தில் ஒரு கோல் என அர்ஜென்டினா 3-2 என த்ரில் வெற்றி பெற்றது. அதே சமயம் இந்தப் போட்டியில் நடுவர்களின் சில முடிவுகள் எகிப்து அணிக்கு எதிராக இருந்தன.
இந்தப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எகிப்து பயிற்சியாளர் ஹோசாம் ஹசன், பிரான்ஸ் நடுவர் பிரான்சுவா லெடெக்ஸியர் மற்றும் விஏஆர் நடுவர்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டினார். "விளையாட்டில் எந்தவொரு நேர்மையும் இல்லை. இந்த உலகக்கோப்பை அர்ஜென்டினாவை நோக்கியே முன்கூட்டியே திட்டமிட்டுத் திருப்பப்பட்டுள்ளது" என்று அவர் ஆவேசமாக கூறினார்.
மேலும் பேசிய அவர், "இது ஒருவேளை மார்க்கெட்டிங் தந்திரமாக இருக்கலாம். லியோனல் மெஸ்ஸியும், கடந்த உலகக்கோப்பையின் சாம்பியனான அர்ஜென்டினாவும் தொடரில் நீடிக்க வேண்டும் என்று பிஃபா அமைப்பு விரும்பியிருக்கலாம். அதற்காக ஒரு முழு நாட்டின் உழைப்பையும் நடுவர்கள் பாழாக்கிவிட்டனர்" என்று அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
எகிப்து பயிற்சியாளரின் இந்தக் கோபத்தில் நியாயம் இருப்பதாகவே கால்பந்து வல்லுநர்களும் கருதுகின்றனர். ஏனெனில், எகிப்து 1-0 என முன்னிலை வகித்தபோது அடித்த இரண்டாவது கோல், விஏஆர் பரிசீலனை மூலம் நடுவர்களால் ரத்து செய்யப்பட்டது. அந்த ஃபவுல் சம்பவம் எகிப்து எல்லையில் நடந்ததால், அது கோல் அடித்ததில் எந்தவொரு நேரடி தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
மேலும், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினாவின் பெனால்டி பாக்ஸ் பகுதியில் நட்சத்திர வீரர் முகம்மது சாலா காலை இடறி கீழே தள்ளப்பட்ட போதும், நடுவர்கள் விஏஆர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பரிசீலிக்கவே இல்லை. அதற்கு அடுத்த சில வினாடிகளில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் வெற்றி கோலை அடித்தார்.
லியோனல் மெஸ்ஸியின் ஆட்டத்தால் அர்ஜென்டினா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய போதிலும், நடுவர்களின் சர்ச்சைக்குரிய முடிவுகளால் எகிப்து அணிக்கு இழைக்கப்பட்ட அநீதி உலகக்கோப்பையின் நேர்மைத்தன்மை மீது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.