“வைபவ் சூர்யவன்ஷிக்காக நானே இந்திய அணியை விட்டுப்போகிறேன்”.. சஞ்சு சாம்சன் தாமாக விலகியதாக தகவல்
“வைபவ் சூர்யவன்ஷிக்காக நானே இந்திய அணியை விட்டுப்போகிறேன்”.. சஞ்சு சாம்சன் தாமாக விலகியதாக தகவல்
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச போட்டிகளில் அறிமுகமான விவகாரத்தில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக வழி வகுக்கும் வகையில், சஞ்சு சாம்சனே தானாக முன்வந்து அணியிலிருந்து விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்பஸ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, மான்செஸ்டர் டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சன், "நானே வெளியே போய் விடுகிறேன், வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகட்டும்" என்று தானாக முன்வந்து பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் கேட்டுக்கொண்டதாகப் புதிய தகவல் பரவி வருகிறது.
கடந்த சில போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து தடுமாறிய சாம்சன், 15 வயது இளம் வீரரின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுகத்திற்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் இருந்து விலகியதை அடுத்து, வைபவ் சூர்யவன்ஷி மிகக் குறைந்த வயதில் இந்திய அணியில் அறிமுகமான வீரர் என்ற சாதனையைப் படைத்தார். தனது அறிமுகப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார்.
இந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், சஞ்சு சாம்சன் மீது கௌதம் கம்பீரும் இந்திய அணி நிர்வாகமும் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்ற ரசிகர்களின் வாதம் முற்றிலும் பொய்யாகிவிடும். 2028 டி20 உலகக்கோப்பை வரை சஞ்சு சாம்சன் அணியின் முக்கிய அங்கமாக நீடிப்பார் என்பதை நிர்வாகம் அவரிடம் தெளிவுபடுத்தியதால் தான், அவர் எவ்வித பயமும் இன்றி இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், ஜிம்பாப்வே டி20 தொடரிலும் சஞ்சு சாம்சன் பெயர் இடம் பெறாததற்கு, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பிரப்சிம்ரன் சிங் போன்ற இளம் வீரர்களைச் சோதிப்பதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட 'ஓய்வு' தான் காரணம் என்றும் தற்போதைய தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சஞ்சு சாம்சன் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்களின் போது மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கலாம்.