ஜெயிலர் 2வில் எஸ்.ஜே.சூர்யா செம மாஸ் ப்பா.. என்ன இவ்வளவு ஸ்டைலா இருக்காரு?
சென்னை: தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. அவர் கடைசியாக 2015ஆம் ஆண்டு இசை படத்தை இயக்கினார். அதற்கு பிறகு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்த சூர்யா கடைசியாக சர்தார் 2 படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக ஜெயிலர் 2வில் நடித்திருக்கும் சூழலில்; அவரது கேரக்டர் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் திறமை வாய்ந்த இயக்குநர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. அவர் இதுவரை இயக்கிய வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்கள் வெவ்வெறு ஜானரில் வந்தவை. அவற்றில் அன்பே ஆருயிரே திரைப்படமும், இசை திரைப்படமும் தோல்வியை சந்தித்தாலும் வித்தியாசமான அட்டெம்ப்ட் என்ற பெயரை பெற்றன. விமர்சன ரீதியாக அந்தப் படங்கள் கொண்டாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் பிஸி: சூர்யாவை பொறுத்தவரை சினிமாவில் நடிப்பதற்காகத்தான் வந்தார். கால சூழ்நிலை அவரை இயக்குநராக மாற்றிவிட்டார். இயக்குநர் ஆனாலும் நடிப்பை விடாத அவர்; ஒருகட்டத்தில் முழுக்க முழுக்க இயக்கத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார். இயக்கத்தில் எப்படி தரமான செய்கைகளை செய்தாரோ அதேபோல் நடிப்பிலும் பின்னியெடுக்கிறார். பல படங்கள் ஹிட்டடித்திருக்கின்றன. பல படங்களை கைகளில் வைத்திருக்கிறார்.
சர்தார் 2 எஸ்.ஜே.சூர்யா: அந்தவகையில் கடைசியாக சர்தார் 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். படம் அப்படி இப்படி இருந்தாலும் சூர்யாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். மார்க் ஆண்டனி திரைப்படத்துக்கு பிறகு சூர்யாவுக்கு இந்தப் படத்தில் வெயிட்டான ரோல் கிடைத்திருந்தது. அதனை சரியாக பயன்படுத்தி மாஸ் காண்பித்துவிட்டார். அடுத்ததாக ஜெயிலர் 2விலும் நடித்திருக்கிறார்.
கேரக்டர் வீடியோ: ஜெயிலர் 2வையும் அவர் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். முதன்முறையாக ரஜினியுடன் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க ஜெயிலர் 2வில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டர் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அப்படத்தில் அவர், போதி கல்பக் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்த வீடியோவில் எஸ்.ஜே.சூர்யா கேஷுவலாகவும், ஸ்டைலாகவும் காரிலிருந்து இறங்கி வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கண்டிப்பாக இந்தக் கேரக்டர் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் அவதாரம்: இதற்கிடையே, அவர் என்னதான் நடித்தாலும் மீண்டும் இயக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசையாக இருந்தது. அவர்களது ஆசைக்காகவும், தனக்காகவும் மீண்டும் இயக்குநராகியிருக்கிறார் சூர்யா. அந்தவகையில் அவர் கில்லர் என்ற படத்தை இயக்கிவருகிறார். த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகும் என தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைப்பாளராக கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.