📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 13, 2026 07:31 PM

எழுத்தாளர் பூமணி மறைவு

எழுத்தாளர் பூமணி மறைவு

எழுத்தாளர் பூமணி மறைவிற்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

பூலித்துரை மாணிக்கவாசகம் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் பூமணி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து துயரம் அடைந்தேன்.

கூட்டுறவுத் துறை பணியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், எண்ணற்ற சிறுகதைகளையும், புதினங்களையும் தமிழ் இலக்கியத்திற்கு கொடை அளித்த பெருமைக்குரியவர். தாமரை இதழில் அறுப்பு என்ற சிறுகதைதான் இவரது முதல் படைப்பு ஆகும்.அஞ்ஞாடி என்ற இவரின் புதினம் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது.

தாய் அன்பு சாதி கலவரங்களுக்கு முற்றுபுள்ளி வைத்தல் முதலானவைகளை விளக்கும் கரிசல் காட்டு இலக்கியமாக இது திகழ்ந்தது. வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள், நல்ல நாள், வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், பிறகு முதலான இவரின் படைப்புக்கள் ஒவ்வொன்றும் முற்போக்கு இலக்கியங்கள் ஆகும்.

இவருடைய வெக்கை எனும் கதையைத் தழுவி இயக்குநர் வெற்றிமாறன், அசுரன் என்ற திரைப்படத்தை உருவாக்கினார்.எழுத்தாளர் கி.ரா எனும் கி.ராஜநாராயணன் அவர்கள் இவரது இலக்கியப் புலமைக்கு தூண்டு கோலாகத் திகழ்ந்தார்.

பெருமைக்குரிய எழுத்தாளரான பூமணி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்தார்.