சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் தான் தாளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட இரியபுரம் கிராமத்தில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அப்பகுதி மக்கள் அங்குள்ள ஊராட்சியில் பலமுறை தெரிவித்தும் அவர்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கபடாததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடிநீர் இல்லாமல் இப்பகுதி மக்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கெல்லாம் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது தோட்டங்களிலும் வறட்சி நிலவுவதால் தண்ணீர் குறைவாக இருப்பதனால், குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக மழை நீரை குடித்து வந்ததாகவும், அந்த மலை கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து ஊராட்சி மன்றத்தில் பல முறை தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று காலை இரியபுரத்தில் இருந்து தாளவாடி செல்லும் சாலையில் பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வந்தனர். சுமார் ஒரு மணிநேரமாக அந்த பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டமானது நடைபெற்று வருகிறது. தற்பொழுது வரை போலீசார் மற்றும் அதிகாரிகள் யாரும் வரவில்லை, இந்த போராட்டம் தொடர்வதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.