சிங்கப்பூர்
சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கிய குழு, தானியக்க முறையில் இயங்கும் கார்பந்தயப் போட்டியில் அண்மையில் வெற்றிபெற்றுள்ளது.
இது அந்த மாணவர்க் குழு மூன்றாவது முறையாகப் பங்கேற்ற போட்டியாக இருந்தாலும் இம்முறை போட்டிக் களத்தில் முன்பைவிட பல சவால்களைக் கடக்க நேர்ந்தது.
அபுதாபி தானியக்கக் கார்பந்தய லீக் (ஏ2ஆர்எல்) போட்டி, இத்தாலியின் ‘இமோலா’ வளாகத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது.
‘டீம் கினெடிஸ்’ எனும் குழுவில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் (யுஏஇ) ‘கே2’ தொழில்நுட்ப நிறுவனத்தினர், தானியக்க செயலமைப்பு நிபுணத்துவ நிறுவனமான ‘அல்ப் அட்டானமி’ ஆகியன உள்ளடங்கின. அக்குழு போட்டியில் பங்கேற்ற மற்ற நான்கு குழுக்களின் தானியக்க கார்களின் வடிவமைப்புகளை வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது.
கடந்த 2024ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அப்போட்டியின் தகுதிச் சுற்றில் ஆறாம் நிலையை ‘டீம் கினெடிஸ்’ குழு அடைந்து நான்கு குழுக்களுக்கான இறுதிப் போட்டிக்குச் செல்லத் தவறியது.