ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலம் எப்போது? பிசிசிஐ கொடுத்த முக்கிய அப்டேட்
ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலம் எப்போது? பிசிசிஐ கொடுத்த முக்கிய அப்டேட்
மும்பை: 2027 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களின் ஏலத்தை 2026 டிசம்பர் மாதத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன் படி, 2025-27 சைக்கிளின் கடைசி மினி ஏலம் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். ஐபிஎல் தொடரின் 20 ஆண்டுகாலப் பயணத்தைக் குறிக்கும் வகையில், அடுத்த சீசனை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாட பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இது குறித்து பேசிய ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமால், 2027 சீசனுக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவில் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வை, மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
கடந்த மூன்று ஐபிஎல் ஏலங்கள் துபாய், ஜித்தாஹ் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. "ஒவ்வொரு வருடமும் இந்த ஏலத்தை இந்தியாவில் நடத்தவே முயற்சிக்கிறோம். ஆனால், திருமண சீசன் அதிகமாக இருப்பதால் தகுந்த இடங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த முறை இது மினி ஏலம் என்பதால், கண்டிப்பாக இந்தியாவிலேயே நடத்த விரும்புகிறோம். அதற்கேற்ப தகுந்த இடம் கிடைக்கும் என்று நம்புகிறோம்," என அருண் சிங் துமால் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ-யின் விருப்பமான இடங்கள் கிடைப்பதைப் பொறுத்து, ஏலம் நடைபெறும் நகரம் இறுதி செய்யப்படும். 2027 ஆம் ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் அக்டோபர் 28 அன்று கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடைபெறும்.
இதில் பங்கேற்கும் ஐந்து அணிகளும் தங்களது தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 28-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். "புதிய சீசனை நோக்கிய முதல் முக்கிய நடவடிக்கையாக, செப்டம்பர் 28, 2026 அன்று வீரர்களைத் தக்கவைப்பதற்கான காலக்கெடு முடிகிறது. ஐந்து அணிகளும் தங்களின் தற்போதைய அணியில் இருந்து வீரர்களைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம் புதிய சீசனுக்கான அணிக் கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கலாம்," என்று WPL தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இதனைத் தொடர்ந்து மகளிர் பிரீமியர் லீக் ஏலம் அக்டோபர் 28, 2026 அன்று கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடைபெறும். அங்கு ஐந்து அணிகளும் தங்களது அணியை வலுப்படுத்த தேவையான வீரர்களைத் தேர்வு செய்வார்கள்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.