ஏய்த்து பிழைக்கும் தொழிலை கச்சிதமாக செய்கிறது தவெக: பழனிசாமி கடும் விமர்சனம்
சென்னை: 'வாய் பந்தல் போடுவதை நிறுத்தி விட்டு, நெல் கொள்முதல் செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: ஏய்த்து பிழைக்கும் தொழிலை, கச்சிதமாக செய்து வரும், முதல்வர் விஜய் தலைமையிலான, த.வெ.க., கூட்டணி அரசு, 'சொல் ஒன்று செயல் வேறு' என, மக்களை வஞ்சிக்கிறது.
உரிய நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால், விவசாயிகளை இன்னல்பட வைத்த த.வெ.க., அரசு, தற்போது பயிர்க்கடன் விஷயத்திலும் ஏமாற்றி விட்டது.
தறிகெட்டு ஓடும் குதிரையை போல், குற்றங்கள் பெருகி வருகிறது. செய்வதறியாது திகைத்து நிற்கும் அரசுக்கு, சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை.
காவிரி டெல்டா மாவட்டங்களில், அறுவடை செய்த நெல்லை, உரிய நேரத்தில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், கொள்முதல் செய்யவில்லை.
இதனால், நெல் முளைவிட்டு பாழாகி வருகிறது. 'வானத்தை வில்லாய் வளைப்போம், விண்மீன்களை பூமிக்கு கொண்டு வந்து வெளிச்சம் தருவோம்' என, வாய்ப்பந்தல் போடுவதை நிறுத்திவிட்டு, நெல்மணிகள் வீணாவதை தடுக்க, உடனே முழுமையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.