"அவனுக்காக என் மனைவியே மேட்ச் பார்க்குறாங்க".. 15 வயது வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய ஸ்ரீகாந்த்
"அவனுக்காக என் மனைவியே மேட்ச் பார்க்குறாங்க".. 15 வயது வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய ஸ்ரீகாந்த்
சென்னை: 2026 துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் 57 ஆண்டு கால சாதனையை உடைத்தெறிந்து இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்த வைபவ் சூர்யவன்ஷியை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாராட்டித் தள்ளி இருக்கிறார். அவரது மனைவியே வைபவ் சூர்யவன்ஷிஆட்டத்தை பார்ப்பதற்காகவே துலீப் டிராபி தொடரை பார்ப்பதாக கூறினார்.
நடப்பு துலீப் டிராபி தொடரில் கிழக்கு மண்டல அணிக்காக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, காலிறுதி போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மத்திய மண்டல அணிக்கு எதிரான அரையிறுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது விஸ்வரூபத்தை காட்டினார். முதல் இன்னிங்சில் 92 ரன்களும், 2வது இன்னிங்சில் 40 ரன்களும் குவித்து அசத்தினார்.
அரையிறுதியின் முதல் இன்னிங்சில் சுழற்பந்து வீச்சாளர் சரண்ஷ் ஜெயின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு வெறும் 42 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன் மூலம் 15 வயது 157 நாட்களில் துலீப் டிராபி வரலாற்றில் அரைசதம் அடித்த மிக இளம் வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். இதற்கு முன் 1969ல் லட்சுமண் சிங் 16 வயது 23 நாட்களில் படைத்த 57 ஆண்டு கால சாதனையை வைபவ் தகர்த்துள்ளார்.
வைபவ்வின் இந்த ஆட்டத்தை பாராட்டி பேசிய ஸ்ரீகாந்த், "வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக விளையாடி வருகிறார். இதுபோன்ற இளம் வீரர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்த வேண்டும். அவரை சரியாக வழிநடத்தினால் உலக கிரிக்கெட்டையே ஆளும் சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டின் பழைய பெருமையை இவர் நிச்சயம் மீட்டெடுப்பார். வைபவ் சூர்யவன்ஷியை நாம் ஊக்கப்படுத்த மட்டுமே வேண்டும். எதிர்மறையாக பேசக் கூடாது" என்றார் .
தொடர்ந்து பேசிய ஸ்ரீகாந்த், "வைபவ்வின் அதிரடியை பார்க்கவே இப்போது பலரும் துலீப் டிராபி போட்டியை பார்க்கிறார்கள். ஏன், எனது மனைவியே அவனுக்காகத்தான் இந்த தொடரை ஆர்வமாக பார்க்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் துளியும் தயக்கமின்றி பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாசி பந்துவீச்சாளர்களை திணறடிக்கிறார். எதிர்காலத்தில் உலக கிரிக்கெட்டுக்கு இவர் மிகப்பெரிய சொத்தாக மாறுவார்" என பெருமிதத்துடன் கூறினார்.