"10,000 ரன் அடித்த எனக்கே இந்திய அணியில் இந்த நிலைமை தான்.. முகமது ஷமி ஏன்..".. கங்குலி ஓபன் டாக்
"10,000 ரன் அடித்த எனக்கே இந்திய அணியில் இந்த நிலைமை தான்.. முகமது ஷமி ஏன்..".. கங்குலி ஓபன் டாக்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் முகமது ஷமி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார். ஷமி புறக்கணிக்கப்படவில்லை என்றும், இந்திய அணிக்காக அவர் ஏற்கனவே அதிக போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு முகமது ஷமி இந்திய அணியில் விளையாடவில்லை. எனினும், உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசி வரும் ஷமி, 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்கு மண்டல அணி துலீப் டிராபி கோப்பையை வெல்வதற்கு முக்கியப் பங்காற்றினார்.
இது குறித்துப் பேசிய கங்குலி, "ஷமி உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த எனக்கே அணியில் ஒரு ஆண்டு வரை வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது; பின்னர் மீண்டும் போராடி உள்ளே வந்தேன். ஷமி ஏன் இப்போது தேர்வாகவில்லை என்பது தெரியவில்லை. ஆனால் அவரது திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ஷமி விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த கங்குலி, "உலகக் கோப்பைக்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் உள்ளது. எனவே அவர் விளையாடுவாரா என்பது குறித்து இப்போதே எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது" என்று குறிப்பிட்டார்.
மேலும், துலீப் டிராபி இறுதிப் போட்டியில் 350 ரன்கள் குவித்து சாதனை படைத்த இஷான் கிஷனைப் பாராட்டிய கங்குலி, "நான் இஷான் கிஷனிடம் தொலைபேசியில் பேசினேன். விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி மற்றும் துலீப் டிராபி என அனைத்து இறுதிப் போட்டிகளிலும் அவர் அபாரமாக விளையாடியுள்ளார். இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள். இஷான் கிஷனும் விரைவில் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புவார் என நம்புகிறேன்" என்று வாழ்த்தினார்.