📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 14, 2026 05:00 AM

வானிலை முன்னறிவிப்பு: டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

கோப்புப் படம்: ஜெ.மனோகரன்

சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (ஜூன் 14) கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வடக்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, வடக்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கி.மீ. உயரத்தில், ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன்காரணமாக, ஜூன் 13, 14, 15 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 13-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 14-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஜூன் 16-ம் தேதி முதல் ஜூன் 19-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் 14-ம் தேதி அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூன் 15-ம் தேதி முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை, புறநகரில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதி, வடக்கு ஆந்திர கடலோரப்பகுதி, தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதி, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, அதனை ஒட்டிய மத்திய மேற்கு- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூன் 17-ம் தேதி பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்படி நாட்கள் வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.