Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Udhayanidhi Stalin on CM Vijay: கடலூர் பெண் கொலைக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் நேரம் எடுத்து கற்றுக்கொண்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது என விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு குறித்து சரமாரி விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடலூரில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக பதிவிட்டுள்ள அவர், சட்டம் ஒழுங்கு குறித்து கடும் குற்றச்சாட்டைமுன்வைத்துள்ளார். மேலும், நேரம் எடுத்து கற்றுக்கொண்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது என்று கூறி, முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது பதிவு என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பதிவு
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.
இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.
இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல. தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.
பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க. நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா? நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.“ என்று கடுமையான விமர்சித்தை முன்வைத்துள்ளார்.
கடலூர் கொலை சம்பவம்
கடலூர் மாவட்டத்தில், 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர், முகம் சிதைத்து கொலை செய்யப்பட்டு, அரைகுறையாக புதைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பெண்ணின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து, கொலை செய்யப்பட்டுள்ள பெண் யார், அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய, 5 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.