தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும்
சென்னை: 'தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட மாவட்டங்களில், இன்று பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக பெரம்பலுார் மாவட்டம் தழுதாழை பகுதியில், 8 செ.மீ., மழை பெய்து உள்ளது. தெலுங்கானா முதல், தமிழகத்தின் மன்னார் வளைகுடா வரை, ஆந்திராவின் ராயலசீமா வழியாக, வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
தமிழகத்தில் சில இடங்கள், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட மாவட்டங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.