தமிழ் இலக்கிய திறனறி தேர்வுக்கு சிறப்பு பயிற்சி
தமிழ் இலக்கிய திறனறி தேர்வுக்கு சிறப்பு பயிற்சி
Google News Tamilகோவை: பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி மற்றும் இலக்கியத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால்,'தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு' நடத்தப்படுகிறது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் 10ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு கொள்குறி வகையில் நடத்தப்படும் இத்தேர்வில், பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்கலாம். கடந்த ஆண்டு நடந்த தேர்வில் மாவட்டத்தில் 52 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 100 மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்குடன் சிறப்பு பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதற்காக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி வாரியாக தனித்தனி வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன. அந்தக் குழுக்கள் மூலம் வாராந்திர பாடத்திட்டங்கள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் பயிற்சி வழிகாட்டுதல்கள் பகிரப்பட்டு, மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு தமிழ் ஆசிரியர்கள், தற்போது பிளஸ் 1 படித்து வரும் மாணவர்களை ஊக்குவித்து, விருப்பமுள்ள மாணவர்களைத் தேர்வு செய்து, தேர்வுக்குத் தயார்படுத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி அறிவுறுத்திஉள்ளார்.