📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 16, 2026 11:34 AM

தென்காசி: மெத்தை வியாபாரியை காரில் கடத்தி நகை பறிப்பு

தென்காசி: மெத்தை வியாபாரியை காரில் கடத்தி நகை பறிப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பஜாரில் மெத்தை வியாபாரியை காரில் கடத்தி சென்று நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மெயின் பஜாரில் சந்தான கிருஷ்ணன் (வயது 76) என்பவர் கடை வைத்து பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் தனது கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடைக்கு வந்து தலையணை குறித்து விசாரித்துள்ளார். பின்னர், தனது உறவினர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு காரில் இருப்பதாகவும், அவரால் காரில் இருந்து இறங்கி கடைக்கு வர முடியாது என்றும் கூறியுள்ளார்.

காரில் கடத்தி நகை பறிப்பு

மேலும், அவர் கேட்கும் தலையணையை காரின் அருகே சென்று காண்பிக்குமாறு தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சந்தான கிருஷ்ணன் அந்த வாலிபருடன், அவர் கூறிய காருக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மர்ம நபர், சந்தான கிருஷ்ணனை காருக்குள் இழுத்துப்போட்டு, கதவை அடைத்து கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் அருகே வைத்து சந்தான கிருஷ்ணன் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலி மற்றும் 1 சவரன் எடையுள்ள 2 தங்க மோதிரங்களை பறித்துக் கொண்டு, அவரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து சந்தான கிருஷ்ணன் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், சம்பவம் நடைபெற்ற மெயின் பஜார் மற்றும் கடத்திச் செல்லப்பட்ட வழித்தடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மெயின் பஜார் பகுதியில் பட்டப்பகலில் வியாபாரியை காரில் கடத்திச் சென்று நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.