📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 12, 2026 11:37 AM

ஸ்டாலின் மிசா கைது: ``இதுவரை அவர்களால் தெளிவான சான்றளிக்க முடியவில்லை"

ஸ்டாலின் மிசா கைது: ``இதுவரை அவர்களால் தெளிவான சான்றளிக்க முடியவில்லை"

ஸ்டாலின் மிசா கைது: ``இதுவரை அவர்களால் தெளிவான சான்றளிக்க முடியவில்லை" - அமைச்சர் நிர்மல் குமார்

மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், ``தற்போதைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியானது வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பதுதான் தற்போதைய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அவர் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்றுதான் பலர் கூறுகிறார்கள். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் 'டிடென்ஷன் ஆர்டர்' (Detention Order) வழங்கப்பட்டிருக்கும்.

ஆனால், ஸ்டாலின் அவர்களுக்கு அத்தகைய உத்தரவு எதுவும் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை காட்டப்படவில்லை. ஏதோ சில விட்னஸ் டாக்குமென்ட்களையோ, முரசொலியில் வெளியான செய்திகளையோ அல்லது ஏதேனும் ஒரு புத்தகத்தையோ ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஒரு பத்திரிகைச் செய்தியையோ அல்லது புத்தகத்தையோ வைத்துக்கொண்டு ஒருவரைத் தியாகி என்று ஏற்றுக்கொள்ள முடியாது.கைது செய்யப்பட்டதற்கான 'டிடென்ஷன் காப்பி' இல்லாத ஒரே தியாகி இவர் மட்டுமாகத்தான் இருக்கும். 1989-ல் ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது.

இரா. செழியன் அவர்கள் மொழிபெயர்த்த சர்க்காரியா கமிஷன் புத்தகத்தில் கூட ஸ்டாலின் அவர்களின் பெயர் இடம்பெறவில்லை. இவ்வாறு 30, 40 ஆண்டுகளாக இருக்கும் ஒரு சர்ச்சைக்கு இதுவரை அவர்களால் தெளிவான சான்றை அளிக்க முடியவில்லை. எனவே, அவரை மீண்டும் மீண்டும் மிகப்பெரிய தியாகியாகக் சித்தரிப்பதால் எந்தப் பயனும் இல்லை. இதை மக்கள் நம்பவும் மாட்டார்கள்.

இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் பரந்தாமன் என்பவர், எக்மோர் தொகுதியில் இருந்த காலத்தில் தொகுதிப் பக்கமே செல்லாதவர். உள்ளூரிலேயே செல்லுபடியாகாத ஒருவரை மதுராந்தகத்தில் கொண்டு வந்து வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.

உள்ளூரில் போட்டியிட ஆள் இல்லாததால் தான் வெளியூர் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். நாளை தேர்தலில் டெபாசிட் இழக்க நேரிட்டால், அதற்கு 'வெளியூர் வேட்பாளரை நிறுத்தியதே காரணம்' என்று சொல்வதற்குக் களம் அமைத்துக் கொள்கிறார்கள்.தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே 'திருமங்கலம் ஃபார்முலா' பாணியில் நூறு கோடி, இருநூறு கோடி என மக்களை ஏமாற்றக் கொண்டு வந்தாலும், மக்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதில் தெளிவான முடிவை எடுப்பார்கள். மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு இவர்கள் தேர்தலைச் சந்தித்தாலும், மக்கள் இவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். 2026 தேர்தலிலும் சரி, இந்த இடைத்தேர்தலிலும் சரி, இரு கட்சிகளுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது.

எதிர்க்கட்சியினர் எதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்றே தெரியாமல் போராடுகிறார்கள். அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் போராட்டம் நடத்துவார்கள் என்றால், தாராளமாக நடத்தட்டும். சட்டமன்றத்தில் அவர்கள் நடந்து கொண்ட முறையைப் பார்த்துப் பொதுமக்கள் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். போராட்டக் களம் அமைத்துக் கொடுத்தால் 50 பேர் கூட சேர மாட்டார்கள். இவர்களின் போராட்டங்களைக் கண்டு மக்கள் கடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதேவேளையில், முதலமைச்சரின் பயணம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், தொழில்துறையை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். சர்வதேச அளவிலான ஃபார்முலா ரேசிங் உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்வதும், பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதுமே இதன் முதன்மை நோக்கமாகும். ஒவ்வொரு நிறுவனத்தைச் சந்தித்து முடித்த பிறகும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முறையாக வெளியாகும்." என்றார்.