பொதுத் தூய்மை குறித்த மனநிறைவில் சரிவு: கருத்தாய்வு
2023ல் 94 விழுக்காடாக இருந்த பொதுத்தூய்மை குறித்த மனநிறைவு, 2025ல் 91 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்வழி தெரியவந்துள்ளது.
ஆய்வு செய்யப்பட்ட ஆறு முக்கியப் பிரிவுகளில், அக்கம்பக்கக் குடியிருப்புகளின் தூய்மை மிகப்பெரிய சரிவு பதிவாகியுள்ளது.
பொதுக் கழிவறைகளின் தூய்மை குறித்த மனநிறைவும் கணிசமாகக் குறைந்துள்ளது.
சிங்கப்பூர்வாசிகள் பல்லாண்டுகளாக உயர்தரத் தூய்மை நிலைக்குப் பழகிவிட்டதால், அவர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பது இந்தச் சரிவுக்குப் பகுதியளவு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2017ல் வெளிவந்த இந்த ஆய்வின் முதல் பதிப்பில் ஒட்டுமொத்தத் திருப்தி நிலை 82 விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நடத்திய பொதுத் தூய்மை மனநிறைவு ஆய்வைச் சமூகவியல் பேராசிரியர் போலின் டே ஸ்த்ராவன், கொள்கை ஆய்வுக் கழகத்தின் தலைமை ஆய்வு அதிகாரி டாக்டர் மேத்யூ மேத்யூஸ் ஆகியோர் வழிநடத்தினர்.
2025 டிசம்பர் முதல் 2026 ஏப்ரல் வரை நடத்தப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர்க் குடிமக்கள், நிரந்தரவாசிகளில் 21 வயதுக்கு மேற்பட்ட 2,007 பேர் பங்கேற்றனர்.
போக்குவரத்து முனையங்கள், பொழுதுபோக்கு இடங்கள், நடைபாதைகள், பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களின் சுற்றுப்பகுதிகள், அக்கம் பக்க வட்டாரங்களின் உணவகங்கள் ஆகிய ஆய்வு செய்யப்பட்ட ஆறு பிரிவுகளிலுமே 2023ஆம் ஆண்டைவிடத் திருப்தி நிலை குறைந்துள்ளது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், எம்ஆர்டி, எல்ஆர்டி ரயில் நிலையங்கள் போன்ற போக்குவரத்து இடங்களின் தூய்மை தொடர்பான மனநிறைவு 98.3 விழுக்காட்டிலிருந்து 97.2 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
அத்துடன் பூங்காக்கள், வணிக வளாகங்கள், விளையாட்டரங்கங்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கான திருப்தி நிலையின் அளவு 96.8 விழுக்காட்டிலிருந்து 95.1 விழுக்காடாகச் சரிந்துள்ளது.