IND vs ENG: வைபவ் சூர்யவன்ஷியால் இந்திய அணியில் வந்த சிக்கல்..பேட்டிங் வரிசை பார்த்தாலே தெரியும் குறை
IND vs ENG: வைபவ் சூர்யவன்ஷியால் இந்திய அணியில் வந்த சிக்கல்..பேட்டிங் வரிசை பார்த்தாலே தெரியும் குறை
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் வரிசையில் மிகப்பெரிய ஒரு பிரச்சனை இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல் டி20 போட்டியில் வலது கை பேட்ஸ்மேன் ஆக சஞ்சு சாம்சன் விளையாடினார்.
இந்த நிலையில் தற்போது இரண்டாவது t20 போட்டியில் அவர் நீக்கப்பட்டு வைபவ் சூரியவன்சி சேர்க்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியில் டாப் ஏழு பேட்டர்களில் ஆறு பேர் இடதுகை பேட்ஸ்மேன் ஆக இருந்திருக்கிறார்கள். இதன் மூலம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும்தான் வலது கை பேட்ஸ்மேனாக களத்தில் இருந்துள்ளார்.
இது எதிரணிக்கு மிகப்பெரிய சாதகத்தை உருவாக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். டாப் பேட்டிங் வரிசையில் குறைந்தபட்சம் 3 பேராவது வலது கை பேட்ஸ்மேனாக இருப்பது அணிக்கு நல்லது என்றும் பெரும்பாலும் இடது கை பேட்ஸ்மேனாக இருந்தால் அதனை பயன்படுத்தி எதிரணியினர் சிறப்பாக திட்டம் தீட்டி இந்திய அணியின் பேட்டிங்கை எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எப்போதுமே வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்க வேண்டும் என்பதை கவனமாக இருப்பார். ஆனால் அவர் எப்படி இந்த தவறை செய்தார் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இடது கை பேட்ஸ்மேன்கள் பலரும் இருக்கும்போது பில்டிங் செட்டப்களை மாற்றத் தேவையில்லை. மேலும் ஒரே மாதிரி யுக்தியை அனைத்து பேட்ஸ்மன்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனால் பந்து வீசும் அணிக்கு எந்தவித தலைவலியும் இருக்காது. மேலும் பவுலர்களும் தொடர்ந்து இடது கை பேட்ஸ்மேன் தான் வருகிறார் என்பதால் அவர்களுடைய லைன் மற்றும் லென்த்தில் மாற்றம் செய்யும் நிலைமை உருவாகாது. இதனால் அவர்கள் தொடர்ந்து ஒரே மாதிரி பந்து வீசலாம். இந்திய அணி இந்த விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், இனிவரும் காலத்தில் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று வலது கை பேட்ஸ்மேன் ஆகாது டாப் ஏழு இடத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.