சுப்மன் கில் கூச்ச சுபாவம் உடையவர்.. ரொம்ப அமைதியா இருப்பார்.. GT பயிற்சியாளர் நெஹ்ரா கருத்து
சுப்மன் கில் கூச்ச சுபாவம் உடையவர்.. ரொம்ப அமைதியா இருப்பார்.. GT பயிற்சியாளர் நெஹ்ரா கருத்து
மும்பை: குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் குணங்களை அவர்களது கேப்டன்ஷிப் திறனையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். இதில் ஹர்திக் பாண்டியா அதிகமாக பேசக்கூடியவர் மற்றும் தன் மீது முழு நம்பிக்கை வைத்தவர் என்றும், சுப்மன் கில் சற்று அமைதியானவர் மற்றும் கூச்ச சுபாவம் கொண்டவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் கேப்டனாகச் செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, அறிமுக சீசனான 2022-இல் அணிக்குக் கோப்பையை பெற்றுத் தந்தார். தொடர்ந்து 2023 சீசனிலும் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். அதன் பின்னர் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, சுப்மன் கில் குஜராத் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கில்லின் தலைமையின் கீழ் குஜராத் அணி மூன்று சீசன்களில் விளையாடி, அதில் இரண்டு முறை பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இது குறித்து பேசிய நெஹ்ரா, "அவர்கள் இருவரும் முற்றிலும் வேறுபட்டவர்கள். வடதுருவம் மற்றும் தென்துருவம் போன்றவர்கள்" என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
"அவர்கள் இருவருக்குமே கேப்டன்ஷிப்பில் பெரிய அளவில் முந்தைய அனுபவம் இருந்ததில்லை. ஆனால், வழிநெடுகிலும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு முன்னேற முடியும். தற்போது சுப்மன் கில் இந்திய அணியின் இரண்டு ஃபார்மட்டுகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார். அவர் போகப்போக இன்னும் சிறப்பாக உருவெடுப்பார்" என்றார்.
"ஹர்திக் பாண்டியா என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார், அது மிகவும் சிறப்பான ஒரு விஷயம். அவர் எப்போதும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார். ஏதாவது சரியாக அமையவில்லை என்றால் உடனடியாக அது குறித்துக் கேட்பார். அவரிடம் நாம் நிறைய உரையாடல்களை மேற்கொள்ள முடியும். மறுபுறம், சுப்மன் கில் சற்று அமைதியானவர், கூச்ச சுபாவம் உடையவர்."
"ஆனால் அதில் தவறேதும் இல்லை, ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதம். கில், ஹர்திக் அளவுக்கு அதிகமாகப் பேச மாட்டார். ஆனால் சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகவும் சரியாகவும் சொல்வார். உற்று நோக்கி ஆராய்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர்" என்று நெஹ்ரா தெரிவித்தார்.
"நிச்சயமாக அவர் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறார். அவருக்கு இப்போதுதான் 26-27 வயது ஆகிறது. அவர் பல ஆண்டுகளாகக் கேப்டனாகச் செயல்படவில்லை, 1-2 சீசன்கள்தான் ஆகியுள்ளன. அனுபவங்கள் மூலம் பல விஷயங்களைக் கற்றறிந்து அவர் இன்னும் சிறந்த கேப்டனாக மாறுவார்" என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார்.