📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 13, 2026 04:30 AM

சிங்கப்பூரின் பழங்காலக் கதைகள்: முன்னோடிகளின் நினைவுகள்

சிங்கப்பூரின் பழங்காலக் கதைகள்: முன்னோடிகளின் நினைவுகள்

முதன்முதலில் சிங்கப்பூரில் லிட்டில் இந்தியாவாகக் கருதப்பட்ட தஞ்சோங் பகார், தமிழர்கள் அதிகம் வாழ்ந்துவந்த ஜாலான் காயு வட்டாரம், தமிழ்ப் பள்ளிகள், ஊடகத் துறையின் வளர்ச்சி, மறைந்த தமிழர்களின் தொழில்கள் எனப் பல்வேறு கதைகளை நினைவுகூர்ந்தார் மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வம்.

சனிக்கிழமை (செப்டம்பர் 12) கல்சா சங்க வளாகத்தில் நடைபெற்ற ‘உங்கள் நினைவுகளைப் பகிர்ந்திடுங்கள், நம் நாட்டு நிர்மாணம், சிங்கப்பூர்க் கதையைப் பாதுகாப்போம்’ என்ற பகிர்வு நிகழ்ச்சியில் அவர் அக்கதைகளைப் பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

தஞ்சோங் பகார் பழங்காலத்தில் முக்கியக் கலாசார மையமாகக் கருதப்பட்டது என்றார் அவர். நீலாம்பிகை தமிழ்ப் பள்ளி, உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளி போன்ற முக்கியத் தமிழ்க் கல்வி நிலையங்கள் தஞ்சோங் பகாரில் அமைந்திருந்தன.

அத்தகைய தமிழ்ப் பள்ளிகள் சிங்கப்பூரின் முதல் சில தலைமுறையினரின் கல்வியில் இன்றியமையாத பங்கு வகித்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் ஊடகத் துறையின் வளர்ச்சிக்குத் தமிழ் முரசு, பிற்பகல் நேரப் பத்திரிகையாக இயங்கிய தேச தூதன், இளையர்களுக்கான மாணவர் மணிமன்றம், சிங்கப்பூர்த் தமிழ் வானொலி ஆகியவை முக்கியப் பங்களித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

அக்காலத்தில் பல புகழ்பெற்ற நாடகங்கள் வானொலியில் படைக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.

காலப்போக்கில் பல தமிழ்ப் பாரம்பரியப் பணிகள் மறைந்துபோனதை எண்ணித் திரு பன்னீர்செல்வம் கவலையுற்றார்.

அம்மி கொத்துதல், தச்சு வேலை, கைச்சலவை போன்ற பல்வேறு பணிகள் தற்போது மறைந்து போயின.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தமிழர்களின் மற்றொரு பாரம்பரியப் பணியான மாட்டுப் பண்ணை நிர்வாகம், பால் வியாபாரம் ஆகியவை அக்காலத்தில் செயின்ட் ஜார்ஜஸ் சாலை, டவுன்ஷெண்ட் ரோடு, பிளான்டேஷன் அவென்யூ, இயோ சூ காங் போன்ற வட்டாரங்களில் அதிகம் நடந்து வந்ததாக அவர் சொன்னார்.

தமிழர்கள் 1960களில் அதிகம் கூடி, கலாசார விழாக்களைக் கொண்டாடும் இடமாக கம்போங் பாரு விளங்கியது என்றும் முதல் திருக்குறள் விழா அங்குதான் நடந்தது என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.

தமிழர்கள் மட்டுமன்றி தென்னிந்தியர்கள் பலர் அக்காலத்தில் அரச ஆகாயப் படையிலும் (Royal Air Force) பொதுப்பணித்துறையிலும் (PWD) பணியாற்றி வந்ததால் அவர்கள் செம்பவாங், சாங்கி வட்டாரங்களில் அதிகம் வசித்து வந்தனர்.

புக்கிட் பாஞ்சாங், ஜாலான் காயு வட்டாரங்களிலும் தமிழர்கள் பலர், குறிப்பாகத் திருநெல்வேலி மக்கள் வாழ்ந்துவந்ததாக அவர் கூறினார்.

“அக்காலக்கட்டத்தில் தமிழர்கள் மட்டுமன்றி தென்னிந்தியர்கள் அனைவரும் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அவர்கள் அனைவருக்கும் தென்னிந்திய மொழிகள் அனைத்தும் புரியும். அவர்களுக்கிடையே சிறப்பான இணக்கம் இருந்தது,” என்றார் அவர்.

பொங்கல் போன்ற பல்வேறு கலாசாரக் கொண்டாட்டங்களை அனைத்து இனத்தவரும் இணைந்து கொண்டாடியது நினைவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களின் கதைகள்

ஜாலான் காயு வட்டாரத்தில் பிறந்து வளர்ந்த முன்னாள் தமிழாசிரியர் ர. கலாவிற்கு அக்கால நினைவுகள் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளன.

“அக்காலத்தில் அனைவரது வீட்டின் கதவுகளும் திறந்துதான் இருக்கும். அண்டைவீட்டார் அனைவரது வீடுகளுக்கும் சென்று வருவோம்.

“இன, சமய பேதங்கள் எதுவும் இல்லாமல் வளர்ந்த காலம் அது. இன்றளவும் நாங்கள் அனைவரும் தொடர்பில் இருந்து எங்கள் நினைவுகளை ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடுகிறோம்,” என்றார் அவர்.

வசதிகள் பெரிதும் இல்லையெனினும் மகிழ்ச்சி நிறைந்த காலமாக அது தமக்கு அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

1965ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த ஒரு கலவரத்தின்போது தமது தந்தையுடன் காவல் அதிகாரிகளுக்கு உணவு வழங்கி உதவியதைப் பகிர்ந்து கொண்டார் 75 வயது முஹம்மது மீரான்.

“அக்காலத்தில் என் தந்தை காவல் நிலையங்களில் உணவுக் கடைகளை இயக்கி வந்தார். அப்போது எதிர்பாரா விதமாக நடந்த கலவரங்களின்போது அதிகாரிகளுக்கு உணவு வழங்கும் சூழல் ஏற்பட்டது.

“18 வயதில் அத்தகைய சூழலில் சென்று அவர்களுக்கு உணவு வழங்கியதை இன்றளவும் மறக்க முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

இயோ சூ காங் வட்டாரத்தில் அமைந்திருந்த குளம் ஒன்றில் குளிப்பது தமது இளமைக் காலத்தின் முக்கிய நடவடிக்கையாக விளங்கியதெனக் கூறினார் 74 வயது யு.கா.லீலாவதி.

“நான் வசித்துவந்த அவ்வட்டாரத்தில் இருந்த குளம் தூய்மையாக இல்லையெனினும் அதில் குளிப்பதுதான் அதிக ஆனந்தத்தைத் தந்தது. இன்று இருக்கும் பல வசதிகள் அன்று இல்லை.

“மின்சாரம், தண்ணீர், சுகாதாரம் என அனைத்துமே அப்போது சற்றுக் குறைவாக இருந்தாலும் மனிதர்களிடையே பிணைப்பு வலுவாக இருந்தது,” என்று அவர் சொன்னார்.

அக்காலத்தின் கல்வி முறை மாணவர்களைச் செம்மைப்படுத்த ஏதுவாக இருந்ததெனக் கருதுகிறார் முன்னாள் தமிழாசிரியர் ரா.துரை மாணிக்கம்.

“நான் என் மாணவர்களிடம் கூறுவது என்றும் ஒன்றுதான். ஆங்கிலம் வானில் பறப்பதற்கு, தமிழ் தரையில் நடப்பதற்கு. இரண்டும் மிக முக்கியம். மாணவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை அன்று புகட்ட முடிந்த அளவிற்கு இன்று செய்ய முடியவில்லை,” என்று அவர் வருந்தினார்.

இத்தகைய நிகழ்ச்சிகள் எதிர்காலத் தலைமுறையினருக்குக் கடந்தகாலக் கதைகளைக் கடத்திச் செல்வதற்கு மிகவும் முக்கியம் என்று திரு பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

அவருடனான கலந்துரையாடல் அங்கத்தை வழிநடத்திய ஊடகப் பிரபலம் திரு முகம்மது அலி, “நாம் தொடர்ந்து எங்குச் செல்ல வேண்டுமென்று அறிய, நாம் எங்கிருந்து வந்துள்ளோம் என்பதை அறிவது அவசியம்,” என்று குறிப்பிட்டார்.