16 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு
சென்னை: 'தமிழகத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை உட்பட, 16 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம், சேர்வலாறு அணை; திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆகிய இடங்களில், தலா, 6 செ.மீ., மழை பெய்தது.
தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. கேரள பகுதிகளில், தென்மேற்கு பருவமழை நாளை தொடங்க உள்ளது. தமிழகத்தில் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில், சில இடங்களில், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.