துரைமுருகன், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,க்கு ரூ.10 கோடி பரிசு: கள் இயக்கம் அறிவிப்பு
சென்னை: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், வேட்பாளரை நிறுத்தப்போவதாக, தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
சென்னையில், அவர் அளித்த பேட்டி; காவிரி உரிமையை மீட்கவும், கள் விற்பதற்கான தடையை நீக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், வேட்பாளரை நிறுத்துவோம்.
நீதிபதி கோகுல தாஸ் பரிந்துரைப்படி, கள் மீதான தடையை அரசு நீக்க வேண்டும். 'கள் மீதான தடை நியாயமானது' என, நிரூபிக்கும் எம்.எல்.ஏ.,விற்கு, 'இனோவா கார்' இலவசமாக வழங்கப்படும்.
காவிரி பிரச்னைக்கு, தினசரி நீர் பங்கீடு மட்டுமே தீர்வு. இதற்காக தமிழக அரசு, காவிரி நடுவர் மன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். கீழ்பவானி, தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை.
பொதுப்பணி துறையை, தங்கள் வசம் வைத்திருந்த முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர், கீழ்பவானியில், விதிமுறை மீறல் எதுவும் நடக்கவில்லை என நிரூபித்தால், அவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.