முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அஜித்குமார்.. முதல் வாழ்த்தே சூப்பரா இருக்கே
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராகியிருக்கிறார் விஜய். அவர் பொறுப்பேற்றதிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்கு வேலைகளை செய்துவருகிறார். அது வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருசேர பெற்றுவருகின்றன. சூழல் இப்படி இருக்க தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் விஜய்க்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்திருக்கிறார் அஜித்குமார்.
விஜய்யும் அஜித்தும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் வந்தவர்கள். ஒன்றாகவே வளர்ந்த அவர்கள்; போட்டியாளர்களாகவும் திகழ்ந்தார்கள். ரஜினி - கமலுக்கு பிறகு அஜித் - விஜய் போட்டிதான் கோலிவுட்டில் பெரிதாக நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இரண்டு பேரின் ரசிகர்கள் மாறி மாறி கலாய்ப்பதும், சண்டை போடுவதும்கூட அடிக்கடி நடக்கும்.
முதலமைச்சரான விஜய்: சூழல் இப்படி இருக்க நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பித்து; சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியையும் பிடித்துவிட்டார். அவர் சி.எம் ஆனதிலிருந்து திரைத்துறையை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் நேரில் சென்று அவரை சந்தித்து வாழ்த்திவருகிறார்கள். ஆனால் அஜித்தோ அப்படி எதுவும் செய்யவில்லை. ஏகே ஒரு வாழ்த்தாவது சொல்வாரா என்ற கேள்வியும் நீண்ட மாதங்கள் இருந்தன.
அஜித்தின் அறிக்கை: இந்நிலையில் தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பது தொடர்பாக தவெக கூட்டணி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அஜித்குமார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு, பொருள்: தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் முன்னெடுப்பிற்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.
குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் திரு. நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் புகழ்பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி இவ்வாறு கூற விரும்புகிறேன்: "One small step by the Tamil Nadu Government, one giant leap for Indian motorsports."
மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெறட்டும். நன்றியும் வாழ்த்துகளும், அஜித் குமார்" என குறிப்பிட்டிருக்கிறார்.