IND vs WI: ரஞ்சியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்த 29 வயது வீரர் உலககோப்பை தொடரில் விளையாட மாட்டார்
IND vs WI: ரஞ்சியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்த 29 வயது வீரர் உலககோப்பை தொடரில் விளையாட மாட்டார்-ஜாபர்
மும்பை: இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர், வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான திட்டத்தில் இடம் பெற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கவுள்ள மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் 29 வயதான ஆகிப் நபி முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஜாபர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் போன்ற முன்னணி வீரர்கள் இதே காலக்கட்டத்தில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளதால், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இந்த வேகப்பந்து வீச்சாளருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும், தனது யூடியூப் சேனலில் பேசிய வசீம் ஜாபர், தற்போதைய நிலையில் உலகக் கோப்பை போன்ற முக்கியத் தொடருக்கான தேர்வில் நபி இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.
"தற்போதைய நிலையில் உலகக் கோப்பைக்கான தேர்வாளர்களின் சிந்தனையில் ஆகிப் நபி இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும், இந்தத் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்து சிறப்பாக செயல்பட்டால், தனது திறமையின் மூலம் அவர் தன் பெயரை முன்னிறுத்த முடியும்.
அது தேர்வாளர்களுக்கு ஒரு சிறிய தலைவலியை ஏற்படுத்தலாம், ஆனால் அது அவருக்கு இங்கு எத்தனை வாய்ப்புகள் கிடைக்கின்றன மற்றும் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பொறுத்தது. தற்போதைய நிலையில், அவர் உலகக் கோப்பை திட்டங்களில் இருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன்" என்றார்.
ஆகிப் நபி முக்கியமாக சிகப்பு பந்து கிரிக்கெட்டில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால், தேர்வாளர்கள் அவர் மீது அதிக பொறுப்பை ஒப்படைக்க மாட்டார்கள் என்றும், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்றோரைத்தான் அவர்கள் கவனத்தில் கொள்வார்கள் என்றும் ஜாபர் மேலும் தெரிவித்தார்.
ஆகிப் நபி இதுவரை 36 லிஸ்ட்-ஏ போட்டிகளில் விளையாடி 27.37 சராசரி, 31.55 ஸ்டிரைக் ரேட் மற்றும் 5.20 எகானமி ரேட்டுடன் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அவர் ஒரு சதம் உட்பட 572 ரன்களையும் குவித்துள்ளார்.