என் பிள்ளைகளுக்கு கொடுத்துட்டு போவது அதைத்தான்.. சூரி எமோஷனல்.. என்ன நடந்தது?
சென்னை: சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மண்டாடி திரைப்படம் செப்டம்பர் பத்தாம் தேதி ரிலீஸாகிறது. அன்றைய நாள்தான் கார்த்தியின் சர்தார் 2 படமும் வருகிறது. இந்தப் போட்டியில் மண்டாடி பந்தயம் அடிக்குமா என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருக்கும் சூழலில்; சூரியின் பேட்டி ஒன்று சோஷியல் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
காமெடி நடிகராக திரைத்துறையில் கரியரை தொடங்கிய சூரி; வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2, மாமன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். இவற்றில் மாமன் படம் தவிர்த்து மற்ற படங்கள் விமர்சன ரீதியாகவோ அல்லது வசூல் ரீதியாகவோ சக்கைப்போடு போட்டன. அதிலும் கருடன் படம் சூரிக்கான மார்க்கெட்டை அதிகரித்தது என்றே சொல்லலாம்.
மண்டாடி சூரி: இப்போது அவர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார். மீனவர்களின் வாழ்வியலையும் அவர்களுக்குள் நடக்கும் போட்டியையும் மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியிருப்பது ட்ரெய்லரை பார்க்கையில் தெரிகிறது. சூரியுடன் சத்யராஜும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். செப்டம்பர் பத்தாம் தேதி படமானது ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கு சர்தார் 2: பத்தாம் தேதிதான் கார்த்தியின் சர்தார் 2 படமும் வருகிறது. இதனை மித்ரன் இயக்கியிருக்கிறார். முதன்முறையாக டாப் 10 ஹீரோக்களில் ஒருவருடன் போட்டியிடுகிறார் சூரி. இதில் மட்டும் அவர் பந்தயம் அடித்துவிட்டால் கண்டிப்பாக அவரது மார்க்கெட் அடுத்தடுத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தின் மீது சூரியின் ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
ப்ரோமோஷன் பணிகள்: படத்தில் சூரியும் கெட்டப், நடிப்பு, நடனம் என அத்தனையும் சூப்பராக இருக்கிறது. மண்டாடி பாடலுக்கு அவர் ஆடிய நடனத்தை பார்த்து பலரும் ஃபயர் விடுவதும் கவனிக்கத்தக்கது. ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால்; படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாகியிருக்கிறார் சூரி. அந்தவகையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சூரி பேட்டி: அவர் அந்தப் பேட்டியில் பேசுகையில், "நான் ஒவ்வொரு மீடியாவிலும், வீடியோவிலும் பேசுவது நடந்ததை பதிவு செய்வது மட்டுமில்லை. என் குழந்தைகளுக்கு நான் கொடுத்துட்டு போவது இந்த வீடியோவைத்தான். அந்தக் காலத்தில் என்றால் எழுதி வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். இப்போது இதுதான். நம்மாள் முடியாதது எதுவும் இல்லை; முடியும், அவமானம், அசிங்கங்களை நினைக்காதீர்கள் என்பதுதான் நான் சொல்வது. அப்படி இருப்பதுதான் பெரிய விஷயம்" என்றார்.